கீரவாணி என்ற மரகதமணி தெலுங்குலகில் மிகவும் ரசிக்கப்படும் இசையமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் கீரவாணியின் இசைக்கென்றே தெலுங்குலகில் தனி மார்க்கெட் உள்ளது.
‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். 8 முறை ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றிருக்கிறார். 4 முறை பிலிம்பேர் விருதைப் பெற்றிருக்கிறார். ‘அழகன்’ தமிழ்ப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதினையும் பெற்றிருக்கிறார் கீரவாணி. தமிழில் ‘அழகன்’, ‘நீ பாதி நான் பாதி’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘தேவராகம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்..
தெலுங்கின் ஹாட்டஸ்ட் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பல படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர். இவருடைய இசையில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் தீம் மியூஸிக் இன்றளவும் அந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய அடையாளமாக இருந்தது என்றே சொல்லலாம். ராஜமெளலி இயக்கி வரும் அடுத்த படமான ‘பாகுபாலி’க்கும் கீரவாணிதான் இசை..!
இன்றைக்கும் இசையமைக்கக் கேட்டு இவரது அலுவலக வாசலில் வந்து நிற்கும் தெலுங்கு இயக்குநர்கள். நிறைய அப்படியிருந்தும் வரும் 2016 டிசம்பர் 8-ம் தேதியோடு தான் இசைத்துறையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதை இந்தச் செய்தியில் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இது அவரது ரசிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. எந்தவொரு கலைஞனும் தான் ரிட்டையர்டு பெர்ஸன் என்பதை வெளியில் சொல்லவே மாட்டார்கள். வாய்ப்புகள் வரும்வரையிலும் தன் திறமையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். நடக்க முடியாத நிலையில் இருந்தாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே நடித்த கலைஞர்களும் இங்கே உண்டு. டப்பிங் பேசிய, பாடிய கலைஞர்களும் உண்டு. அப்படியிருக்க நல்ல உடல் நலத்துடன், நிறைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய திறனில் இருந்தாலும் கீரவாணியின் இந்த முடிவு எதிர்பாராதது..!
“இந்த நிலைமையில் இந்த திடீர் ஓய்வு முடிவு சரிதானா..? எதற்காக இப்படியொரு முடிவை எடுத்தீர்கள்..? என்று நேற்று நடைபெற்ற ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கீரவாணியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்தான் இந்தப் பதிவின் டைட்டில்.
“இது முன்னாடியே பிக்ஸ் செஞ்சதுதான்.. ஒருத்தரோட திறமை ஒரு கால அளவுக்குத்தான் வரும்.. அதையும் தாண்டி நாம வேலை பார்க்க முடியாது.. ரசிகர்கள் துரத்துறதுக்குள்ள நாமளா போயிடறதுதான் நமக்குப் பெருமை. அதுனாலதான் இந்த முடிவு. இதில் எந்த மாற்றமுமில்லை..” என்றார் உறுதியாக..! “உங்களைத் துரத்துற அளவுக்கு சூழ்நிலை இப்போதில்லையே.. சரக்கு இன்னமும் உங்ககிட்ட நிறைய இருக்கே..?” என்று கேட்டதற்கு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.
நிஜத்திலும் வித்தியாசமான மனிதராக இருக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி.