full screen background image

சுனாமியில் தொலைந்து போன காதல்தான் ‘கயல்’ திரைப்படம்..!

சுனாமியில் தொலைந்து போன காதல்தான் ‘கயல்’ திரைப்படம்..!

மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயம். ஆனால் பிரபு சாலமனுக்கு அதுவொரு சுகமான அனுபவம். “சின்ன ஓட்டைதானே என்ற அலட்சியம் கப்பலையே கவிழ்த்து விடும். ஆகவே, சின்ன சின்ன விஷயத்திலும் கவனம் செலுத்துவது அழகான படைப்பை தரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு..” என்கிறார் பிரபுசாலமன்.

அவருடன் ஒரு மினி பேட்டி..

கயல் எப்போது திரைக்கு வரும்…?

“முழுமையாக முடிந்த பிறகுதான்.. அவசரமான படைப்பு ஆபத்தாகிவிடும். இப்போதுதான் டப்பிங்கிற்கே வந்துருக்கோம். எங்களது படைப்பில் எனக்கு திருப்தி வந்தவுடன், மக்கள் பார்வைக்கு வரும்.

சுனாமி பாதிப்புகள் ஏற்படுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. டிசம்பர் 26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது. அதிலும் கடலோர மாவட்டங்களைத்தான் அதிகம் பாதித்தது. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறோம். எவ்வளவு பேர் சொந்தங்கள், உறவுகள், சொத்துக்கள், உடமைகளை இழந்தார்கள்.. அதில் கூடவே தொலைந்து போன ஒரு காதல்தான் இந்தக் ‘கயல்’.

கயல் படத்தின் கதைக் கரு சுனாமி மட்டும்தானா…?

“முழு காமெடியுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கைதான் சுகமானதாக அமையும்.என்கிற மையக் கருதான் காமெடியுடன் சொல்லப்படுகிறது. கடைசி அரைமணி நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும்..”

உங்கள் கதைகளில் நட்சத்திர நடிகர்கள் இருப்பதில்லையே..?

“என்னுடைய ஆரம்ப கால படங்களில் அர்ஜுன், விக்ரம், சிபிராஜ், கரண் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்களே…! ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ போன்ற என் எதார்த்த கதைகளுக்கு நட்சத்திர நடிகர்கள் சரியாக மாட்டார்கள். என் கூடவே பயணமாகிற மாதிரியான நடிகர்கள் ‘மைனா’வுக்கும், ‘கும்கி’க்கும் தேவைப்பட்டது லொகேசன் கொடுத்த இயற்கை மாற்றதிற்கேற்ப ‘மைனா’ படத்தை எடுத்தோம். அதனால் புதுமுகம்தான் சரி. யானையின் மூடுக்கேற்ப படமாக்கப்பட வேண்டியதால் ‘கும்கி’க்கும் புதுமுகம் தேவைப்பட்டது. ‘கயல்’ படத்திற்காக பிரமாண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதில் காலை 7 மணிக்கு இறங்கினால் மாலைவரை அதில் இருக்கக்கூடிய புதுமுகம் தேவை என்பதால் ‘கயலி’லும் புதுமுகம்தான் !”

உங்களுக்கு கமர்ஷியல் படத்தில் நம்பிக்கை இல்லையா..?

“கமர்ஷியல் என்பது உங்கள் பார்வையில் அடிதடி மட்டும்தானா..? அடிதடி என்பது மட்டும் வாழ்வியல் அல்ல. நம்மை கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு..! நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு…! அதைப் பதிவு செய்வதில்கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது. நம் வீட்டிற்குள் 340 சேனல்கள் வந்திருக்கின்றன. பெண்கள் சமையலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள். இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த சின்ன சைஸ் பெட்டிக்குள் உலகம் நம் முன்னே வந்து விடுகிறது. அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டியுள்ளதே. ஆகவே, எதைப் பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியப்படுவோம்..” என்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

Our Score