நடிகர் கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற மக்கள் பாராட்டைப் பெற்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.’
இதேபோல் ‘வண்டிச்சக்கரம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ‘விடிஞ்சா கல்யாணம், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் விவேகானந்தா பிக்சர்ஸ். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த ‘கார்த்தி 18’ படத்தை தயாரிக்கிறது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கை கோர்க்க வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப் பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன்(அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
முழுக்க, முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் பிரத்யேக காட்சிகளை அமைக்கிறார்.
இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன், படத் தொகுப்பு – ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் – சதீஷ்குமார், வசனம் : பொன் பார்த்திபன், தயாரிப்பு – S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு & திருப்பூர் விவேக்.
சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது.










