full screen background image

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் காலமானார்

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் காலமானார்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 46.

கன்னட சினிமாவின் மூத்த நடிகரான ராஜ்குமாரின் கடைசி மகனான புனீத் ராஜ்குமாரும் கன்னட சினிமாவில் ஒரு மிகப் பெரிய ஸ்டார் நடிகராக இருந்தவர்.

இன்று காலை ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது புனீத்திற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன்தான் புனித் ராஜ்குமார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. புனீத் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்து, மருத்துவமனைக்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர் இறந்துவிட்ட செய்தியறிந்து பலரும் கதறி அழுதனர்.

‘அப்பு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் தனது சிறு வயதிலேயே சினிமா துறைக்குள் வந்தவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தவர்.

‘பெத்தாட ஹூவு’ என்ற கன்னட படத்தில் சிறுவர் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். ‘செலிசுவா மொடகுலு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசின் விருதையும் வென்றிருக்கிறார்.

2002-ம் ஆண்டு வெளியான ‘அப்பு’ என்ற கன்னடப் படத்தில்தான் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இதுவரையிலும் 31 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் 4 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். 2 படங்கள் தயாரிப்பில் உள்ளன. 2 முறை கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இவருக்குத் திருமணமாகி அஸ்வினி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். வெறும் 46 வயதிலேயே இவர் காலமானது கன்னட சினிமா துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இவரது மறைவுக்கு கன்னட திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் அடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

Our Score