full screen background image

“சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்கள்தான்..!” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் குமுறல்

“சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்கள்தான்..!” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் குமுறல்

“சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தினமும் செத்து, செத்துப் பிழைக்கிறார்கள். எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை..” என்கிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  இயக்குநர் சாமியின் இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதியன்று தமிழகம் முழுவதிலும் 150 திரையரங்குகளில் வெளியாகிறது .

தனது முதல் பட அனுவபம் பற்றி பேச வந்தவர் கிடைத்த அனுபவத்தை வைத்து அடுத்து வரும் தயாரிப்பாளர்களுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு விரிவாகப் பேசியிருக்கிறார்.

”சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்களுக்கே  சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா..? நிம்மதியாக இருக்கிறார்களா.. என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். 

தயாரிப்பாளர் படும்பாடுகள்.. அவர்கள் சந்திக்கும் சவால்களை சொல்லி மாளாது. ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சாராகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல…” என்றவர் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார்.

பட்ஜெட்டில் பிரச்சினை..!

ஒரு படக் குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அதற்குள் சொன்ன தேதிக்குள், சொன்ன செலவுக்குள் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக் கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும். வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும்.

சொன்ன தேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப் பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால்கூட விடமாட்டார்கள்.

படப்பிடிப்பில் பிரச்சினை..!

படப்பிடிப்பு தொடங்கினால் தினம் தினம் செலவுதான். அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். இப்படி 24 கிராப்டுக்கும் சம்பளம் தர வேண்டும். 2, 3 நாட்கள்கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேனோ,  ஹேர் டிரஸ்ஸரோ நினைத்தால்கூட படப்பிடிப்பை நிறுத்த முடியும். ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால் எதுவுமே செய்ய முடியாது. 

அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நடந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள்..? கொடைக்கானல் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர கொஞ்சம் தாமதம். 2 நாட்கள்கூட அவர்களால் பொறுக்க முடியவில்லை. உடனேயே ஷூட்டிங்கை நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர் வர்க்கம் மட்டும்தான்.

சங்கங்களின் அச்சுறுத்தல்..!

திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளைப் பெற.. ஊதியப் பிரச்சினையைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக, மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். 

நான் ஒட்டு மொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்களே இதற்கு விதிவிலக்கல்ல.. பேட்டா தாமதமானால் யார், யாரோ  போனில் மிரட்டுகிறான். முன்னே, பின்னே பார்க்காத யார் யாரோ  படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான்.  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா..?

24 கிராப்ட்டிற்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது. வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன. லைட்மேனுக்குக்கூட குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்..? தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் எப்போது திரும்பி வரும்.. எப்படி வரும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை.

விநியோகப் பிரச்சினை..!

ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால், அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் பேசுவதுகூட பெரிய போராட்டம்தான்.

.ஆளாளுக்கு ஒவ்வொன்றைக் கூறுவார்கள். இந்தச் சூழலில் ஒரு தயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்கா கஎடுக்க வேண்டுமா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்காக எடுக்க வேண்டுமா? விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா என்று குழம்பிப் போவார். ஒன்றுமே புரியாது. பேசியபடி வியாபாரமும் நடப்பதில்லை.

சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் சினிமாவில் தொடர்ந்து பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. எங்களால்தான் சினிமா தொழில் தங்குதடையில்லாமல் தொடர்ந்து நடக்கிறது, ஆனால் சிறு படத் தயாரிப்பாளர்களாகிய எங்களுக்குத்தான் இங்கு மரியாதையே இல்லை. 

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால்தான் விநியோகஸ்தர்கள் வருகிறார்கள், வியாபாரம் பேசுகிறார்கள். அவர்களின் முதல் கேள்வியே படத்தில் பெரிய நடிகர்கள் இருக்கிறார்களா என்பதுதான்.

பெரிய நடிகர்கள் ஆறு, ஏழுபேர்தானே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வருஷத்துக்கு எத்தனை படம் எடுக்க முடியும்..? ஆறு, ஏழு படம்தானே எடுக்க முடியும். மற்ற நாட்களில் யார் படங்களை திரையரங்கில் வெளியிடுவது..? வருடத்திற்கு 200 படங்கள் வெளியானால் அதில் பெரிய தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்கள் 10-தான் இருக்கும். மற்ற 190 படங்களையும் தயாரிப்பது சின்ன தயாரிப்பாளர்கள்தானே..?

திருட்டு விசிடி பிரச்சினை..!

ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் நோகாமல் திருட்டு விசிடி   போட்டு கொள்ளையடிக்கிறார்கள்.  இதைத் தடுக்கவும் வழியில்லை.

சென்சார் பிரச்சினை..!

ஒரு படத்துக்கு ‘யு’ சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார், யாரோ கேள்வி கேட்பார்கள். என்னவெல்லாமோ குதர்க்கமாக கேட்பார்கள். அப்பாடாவென்று ‘யு’ சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்று நாக்கு தள்ளி விடுகிறது.  இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டப் போகும்போது எவன் எப்போது வழக்கு போடுவான் என்று தெரியாமல் பயப்பட வேண்டியிருக்கிறது. இப்போ சொல்லுங்க.. தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா..? இல்லையா..?” என்று நம்மிடமே  கேட்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இத்தனை புள்ளி விபரங்களை வரிசையாக அடுக்கி வைத்து அவர் பேசுவதைப் பார்த்தால் சினிமா மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொண்டுள்ள காதல் அழுத்தமாக தெரிகிறது. 

சரி. அவருடைய ‘கங்காரு’ படம் பற்றி என்ன கூறுகிறார்..?

”கங்காரு’ படம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டன. எந்தப் போட்டியுமின்றி ஏப்ரல் 24-ல் வெளிவருகிறது. படத்தின் மீதும், அதன் தரத்தின் மீதும் எனக்கு பெரிதும் நம்பிக்கை இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.

 

Our Score