‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தற்போது தன்னுடைய அதிரடி அவதாரத்தை தொடக்கி இருக்கிறார். ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ள கமல்ஹாசன் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மணிரத்தினத்துடன் கமல்ஹாசன் இணைந்து ‘நாயகனு’க்கு பிறகு பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் ஏற்கனவே அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிகர் கமலஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “நான் நடன இயக்குநராகப் பணிபுரிந்தபோது அஸ்வினி தத் என்ற வளர்ந்து வரும் தயாரிப்பாளர் குறித்து கேள்விப்பட்டேன். தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி.
அமிதாப்பச்சன் உடன் இணைந்து நடிப்பது எப்போதுமே எனக்கு சந்தோஷமான விஷயம். அமிதாப்பச்சன் எப்போதுமே தன்னைத்தானே மெருகேற்றி வருவார். அவருடன் ஏற்கனவே நான் பணியாற்றி இருந்தாலும், தற்போது மீண்டும் முதல்முறையாக அமிதாப்புடன் இணைவது போல் எனக்கு தோன்றுகிறது.
மேலும் பிரபாஸ், தீபிகா படுகோன் என கலைஞர்கள் அனைவரும் நடப்பு தலைமுறையில் சிறந்து விளங்குகிறார்கள். எப்போதுமே புதிய வகை சினிமாவுக்கான முதல் கை தட்டல் என்னோடுதான் இருக்கும். அதற்காகவே இந்த புதிய முயற்சியில் நானும் பங்கேற்று நடிக்க விரும்புகிறேன்..” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.