நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உத்தமவில்லன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள இயவில்லை.
இயக்குநர் சிகரத்தின் மரணத்திற்கு தனது அஞ்சலியை வீடியோ மூலமாக வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
“தமிழ் திரையுலகுக்கு தனது வாழ்நாளில் இத்தகைய தொடர் கொடையைக் கொடுத்தவர் வேறு யாரும் உள்ளார்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் வாழ்ந்த ஒரு கொடை வள்ளல் கே.பாலசந்தர்.
100 படங்கள் இயக்கியதோடு அல்லாமல், பல நூறு கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன்.
அவர் எனது வற்புறுத்தலின் பேரில் பங்கு கொண்ட ‘உத்தம வில்லன்’ என்ற அந்தப் பதிவு என் வாழ்க்கையில் மிக, மிக முக்கியமான பதிவாகும். வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட என் வாழ்வின் ஒரு பதிவாக அது அமைகிறது.
அதற்கு மட்டுமல்ல, நான் எத்தனை விஷயங்களுக்காக இயக்குநர் பாலசந்தருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இதுவே என் அஞ்சலி…
சடங்குகளில் அதிக நாட்டமில்லாத நான், அவரது இறுதிச் சடங்கில்கூட பங்கு கொள்ள முடியாமல் அவர் எனக்கு அளித்த இந்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். இதுவே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கே. பாலசந்தரின் குரல் அவரது மாணவர்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அதைக் கேட்க வைப்பது என் கடமையும்கூட..”
actor kamalhaasan’s condolence message to k balachander demise, he expressed his feelings about k balachander, now he is in uttama villain work in US









