ஒரு துறையில் பிரபலமானவர்களை திரைப்படங்களில் நடிக்க வைப்பது அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது. அந்த வகையில் திரையுலகில் அனைவருடனும் நன்கு அறிமுகமான கமலா தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான கணேஷும் இப்போது நடிக்க வந்துள்ளார். அவர் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தற்காப்பு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
தனது திரையுலகப் பிரவேசம் மற்றும் தற்போதைய தமிழ்ச் சினிமா உலகம் பற்றி பேட்டியளித்துள்ளார்.
திரையரங்கு உரிமையாளரான நீங்கள் திடீரென்று சினிமாவில் நடிக்க வந்தது எப்படி..?
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததில்லை. அப்பா ‘தூங்கா நகரம்’ படத்தில் நடித்தபோது, தான் வில்லனாக நடிக்கப் போகிறோம் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் அதில் நடித்தபோது அவரை எல்லாரும் பாராட்டினார்கள். அவருக்கு அதில் நல்ல பெயர் கிடைத்தது. நடித்ததற்காக அப்பா பணம் எதுவும் வாங்கவில்லை.
அப்பா அப்போது எங்களிடம் சொன்னது ‘நம் சினிமா நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டர்கள் நன்றாக இருக்கும். அந்த சினிமாவுக்கு நம்மால் பெரிதாக எதாவது செய்ய முடியவில்லை என்றாலும் இப்படி படங்களில் நடிக்கும்போது பணம் வாங்கக் கூடாது. நீயும் இப்படி நடித்தால் காசு பணம் வாங்காதே’ என்றார். அந்த ‘தூங்கா நகரம்’ படத்தில் பணியாற்றியவர்கள் என்கிற அறிமுகப் பழக்கத்தில் அடுத்தடுத்து என்னிடம் நடிக்கக் கேட்டார்கள் அப்படித்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன்.
நான் இதுவரை ‘வல்லினம்’ , ‘புதியதோர் உலகம் செய்வோம்’, ‘தற்காப்பு’, ‘பப்பரப்பாம்’, ‘என்னோடு விளையாடு’ என படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘துடி’யில் நடிக்க இருக்கிறேன்.
நடிகராக உங்கள் அனுபவம் எப்படி…?
நான் திரையரங்கு சார்ந்த தொழிலில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவங்கள் கொண்டவன். ஆனால் ஒரு நடிகராக நான் மிகவும் இளையவன். அனுபவமில்லாதவன், கற்றுக் கொள்ள வேண்டியவன் என்கிற நிலையில்தான் இருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் நடிப்பில் நான் ஒரு குழந்தை.
நட்பில் பழகியவர்கள் ,அறிமுகமானவர்கள் ,தொடர்பில் உள்ளவர்கள் என்றுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள் .அதில் தேர்வு செய்து நடிக்கிறேன். நான் நடிப்பிற்கு புதியவன் என்றாலும் திரையுலகில் அப்பாவுக்கு இருக்கும் மரியாதையால் எங்களுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். படங்களில் நடிக்கும்போது மூத்த நடிகர் அண்ணன் ராதாரவி, இயக்குநர் சமுத்திரக்கனி போன்றவர்கள் எனக்காக பொறுமை காத்து ஒத்துழைத்தார்கள்.
எல்லா படங்களிலும் வில்லனாக வருகிறீர்களே..?
என் ஆறு படங்களிலும் எனக்கு வில்லன் வேடம்தான். இந்த முகம் வில்லனாக நடிக்க பொருத்தமாக இருக்குமா.. எனக்கு அது சரிவருமா என்று இயக்குநர்களும் நினைக்கவில்லை. நானும் நினைக்கவில்லை. ஏனென்றால் முரட்டு முகம்.. பெரிய மீசை, மிரட்டும் கண்கள், முகத்தில் மரு, மச்சம் என்று வில்லன்களுக்கு தோற்றம் இருந்தது அந்தக் காலம். இப்போது அதெல்லாம் தேவையில்லை.
பளபளப்பான முகத்திலேயே வில்லத்தனம் செய்ய முடிகிறது. இது ஒரு காலமாற்றம். அழகனான அரவிந்தசாமியையே வில்லனாக பார்க்க முடிகிறது, ரசிக்கவும் செய்கிறார்கள். வில்லன்களும் கைதட்டல் வாங்கும் காலமிது. எனவே தைரியமாக வில்லனாக நடிக்கிறேன்.
திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?
அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள ‘பிரகதாம்பாள்’ என்கிற திரையரங்கை குத்தகை முறையில் எடுத்து நடத்தினார் அதன் மூலம் திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்தபோது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய திரையரங்கத்தை வாங்கினார். அது பழையதாக இருக்கிறதே.. புதிதாக ஒன்று கட்ட வேண்டும் என்று நினைத்து கட்டியதுதான் இந்த கமலா திரையரங்கம்.
இந்தத் திரையரங்கம் 1972-ல் கலைஞர் அவர்களால் திறப்பு விழா செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. இதன் 25-வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது. பின்னர் ஏசி வசதி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் இந்தத் திரையரங்கில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.
சினிமா சிரமத்தில் இருக்கிறது.. தியேட்டர்கள் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?
சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்ல படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை. இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகத்தான் இருக்கிறது. அன்று 10 அரங்குகளில் 50 நாட்கள் ஓடி வசூல் செய்த பணத்தை, இன்று 50 அரங்குகளில் 10 நாட்களில் வசூல் செய்து விடுகிறது.
இன்றைய சூழல் மாறிவிட்டது. இனிமேல் படங்கள் 50 நாட்கள், 100 நாட்கள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அதன்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன.
1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50 திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதைப் போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். ‘பாகுபலி’ எப்படி வசூல் செய்தது..? ‘பாபநாசம்’ எப்படி வசூல் செய்தது..? ‘தனி ஒருவன்’ எப்படி வசூல் செய்தது.? ‘தனி ஒருவன்’ அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது.
வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும்போது யாரும் திருட்டு விசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள். இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.
திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப்படுகின்றனவே.?
இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.
500 டிக்கெட் விற்றால் 250தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டியை நிறுத்த 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? அப்படி அநியாய கட்டணங்களால் மக்களை கசக்கிப் பிழியக் கூடாது. சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.