நடிகர்கள் ரஜினியும், கமலும் ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவர்கள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘ஆடுபுலி ஆட்டம்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற 18 படங்களில் சேர்ந்து நடித்தனர். 1979-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம்தான் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம்.
இதன் பின்பு அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. இது பற்றி ஒரு பேட்டியில் கமல்ஹாசன் குறிப்பிட்டது இது :
“சிங்கப்பூரில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் பிரேக் இடைவெளியில் நானும் ரஜினியும் பேசினோம். அப்போது ரஜினியிடம் நான், ‘இனிமேல் நாம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் ரஜினி. அப்படி நடித்தால் நாம ரெண்டு பேருமே பணம், புகழ், பெயர் இது மூன்றையும் சம்பாதிக்க முடியாது.
இப்போதே இருவரும் சேர்ந்து நடிப்பதால் பட்ஜெட் உயர்கிறது என்று சொல்லி குறைவாக கொடுக்கிறார்கள். இதுவே தொடர்ந்தால் நாம் இருவருமே இங்கே வளர முடியாது; அதனால் நாம் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம்..” என்று சொன்னேன். இதை நண்பர் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். இதன் பின்புதான் இப்போதுவரையிலும் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இது எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்களே செய்து கொண்ட ஏற்பாடு. இதன் பலனை இதன் பின்பு நாங்கள் இருவருமே அனுபவித்தோம்..” என்றார் கமல்ஹாசன்.
இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்குவதாக ஏற்கெனவே அவர்களிடத்தில் ஒப்புதல் பெற்றிருந்தார். அதனால் பஞ்சு அருணாச்சலம் அந்தப் படம் பற்றிப் பேச வந்தபோது, ரஜினியும், கமலும் ‘நாங்கள் இனிமேல் சேர்ந்து நடிக்க மாட்டோம்’ என்று சொல்ல பஞ்சு அருணாச்சலம் அதிர்ந்து போய்விட்டாராம்.
பின்பு “நீங்க முடிவெடுப்பதற்கு முன்பேயே நான் இதைச் சொல்லி உங்ககிட்ட சம்மதம் வாங்கினேனே..?” என்று சொல்லியிருக்கிறார். “அப்போ எங்க ரெண்டு பேரையும் வைச்சு தனித்தனியே படம் எடுத்துக்குங்க. கால்ஷீட் தருகிறோம்…” என்று சொல்லியிருக்கிறார்கள் கமலும், ரஜினியும். ஆனால் இதற்கு ரஜினி கொடுத்த கால்ஷீட் வெறும் 20 நாட்கள்தானாம்.
கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாக பயன்படுத்த நினைத்த பஞ்சு அருணாச்சலம், பம்பரமாக சுழன்று மிகக் குறுகிய காலத்தில் இருவருக்குமான கதைகளைத் தயார் செய்து படத்தை தயாரித்துவிட்டார்.
இப்படி இரண்டு பேரையும் வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை மிக குறுகிய காலத்தில் தயாரித்தளித்தார் பஞ்சு அருணாச்சலம். அதுதான் ரஜினியின் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. கமலின் ‘கல்யாணராமன்’. ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தை எஸ்.பி.முத்துராமனும், ‘கல்யாண ராமனை’ ஜி.என்.ரங்கராஜனும் இயக்கினார்கள்.