‘தெரு நாய்கள்’, ‘ படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா, தற்போது ‘கல்தா’ என்கிற தலைப்பில் தனது மூன்றாவது படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்தப் படத்தை ‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் சிவா நிஷாந்த், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, ‘காக்கா முட்டை’ சசி, சுரேஷ் முத்து வீரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை மற்றும் ராஜசிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இசை – கே.ஜெய் கிருஷ், ஒளிப்பதிவு – பி.வாசு, படத் தொகுப்பு – முத்து முனியசாமி, சண்டை இயக்கம் – கோட்டி, நடன இயக்கம் – சுரேஷ், கலை இயக்கம் – இன்ப ஆர்ட் பிரகாஷ், புகைப்படங்கள் – பா.லக்ஷ்மண், விளம்பர வடிவமைப்பு – பிளஸன்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, இசை – ‘தேனிசைத் தென்றல்’ தேவா, பாடகர்கள் – செந்தில் ராஜலட்சுமி, ‘கானா’ புகழ் இசைவாணி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, ‘டி ஒன்’, எழுத்து, இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ஹரி உத்ரா பேசும்போது, “இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது.
இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்…” என்றார்.











