தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ்-2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
2019-ம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் ‘காளிதாஸ்-2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதை மாந்தர்களின் கதாபாத்திர தோற்றம்- பாரம்பரியத்தை கம்பீரமாக வெளிபடுத்தும் குடும்ப புகைப்படமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக சென்னை மற்றும் கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்” என்றார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.