full screen background image

காலக்கட்டம் – சினிமா விமர்சனம்

காலக்கட்டம் – சினிமா விமர்சனம்

சந்தேகம் என்னும் வியாதி ஒரு மனிதனை ஆக்கிரமித்துக் கொண்டால், அவனது வாழ்க்கை எப்படி நரகமாகும் என்பதை தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் டைப் திரைக்கதையில் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.பாஸ்கர்.

மீனவரான பவனும், சினிமாவில நடனக் கலைஞனாக இருக்கும் கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். கோவிந்துக்கு திருமணமாகவில்லை. ஆனால் பவனுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

பவனும், கோவிந்தும் குடிப்பதில் இருந்து ரவுண்டு கட்டி அடிப்பதுவரையிலும் மிக நெருங்கிய நட்புகள். அடித்துக் கொள்வார்கள். பிறகு சேர்ந்து கொள்வார்கள்.. மொத்தத்தில் நல்லதொரு ‘குடி’மகன்களாக இருக்கிறார்கள்.

நெருங்கிய நண்பன் என்பதால் பவனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் அளவுக்கு அவனது குடும்பத்திற்கே நெருக்கமாக இருக்கிறான் கோவிந்த்.

விதி பவனின் வீட்டின் எதிரே மளிகைக் கடை வைத்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் மூலமாகவே வருகிறது. மளிகைக் கடையோடு வட்டிக்குக் கடன் கொடுக்கும் பிஸினஸையும் சேர்த்தே செய்து வருகிறார் ராஜேந்திரன். வட்டிக்கு பணம் கேட்டு வரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வஞ்சகர் ராஜேந்திரன். சிலரை இதுபோலவே பணத்தைக் காட்டி மடக்கியிருக்கிறார்.

இவருக்கு பவனின் மனைவி மீது ஒரு கண். அவர் எதற்கும் மசிவது போல தெரியவில்லை. எனவே வேண்டுமென்றே பவனின் மனைவிக்கும், கோவிந்துக்கும் ஏதோ ஒரு  தொடர்பு இருப்பதாகச் சொல்லி செய்தியை ஊருக்குள் பரப்புகிறார்.

கடலுக்குள் மீன் பிடிக்க பவன் சென்ற பின்பு பவனின் மனைவிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வரும் கோவிந்தை பற்றி பவனின் காதுபடவே ஓதுகிறார்கள் சிலர். நம்ப முடியாத சூழலிலும் குடியின் மயக்கத்திலும் இருக்கும் பவன், கோவிந்தை தனது வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்கிறான்.

பவன் தன்னிடமிருந்து ஒதுங்கும் காரணம் தெரியாமல் கோவிந்த் குழப்பத்தில் இருக்க.. பவனும் அதீத குடிகாரனாக மாறுகிறார். மீன் பிடிக்கப் போகாமல் குடியே கதியென்று இருக்கிறார். இதனால் குடும்பம் தள்ளாடத் துவங்க.. வேறு வழியில்லாமல் ராஜேந்திரனிடம் வட்டிக்குக் கடன் வாங்க நினைக்கிறார் பவனின் மனைவி.

இதுதான் சமயம் என்று தான் நினைத்த ராஜேந்திரன் பவனின் மனைவியை மடக்கப் பார்க்க.. இதற்கு மசியாத பவனின் மனைவி ராஜேந்திரனை அடித்து அவமானப்படுத்திவிட்டு செல்கிறார். இதனால் இன்னும் கோபமாகும் ராஜேந்திரன், எதேச்சையாக பவனின் வீட்டிக்கு வந்த கோவிந்த் வீட்டுக்குள் பவனின் மனைவியுடன் நடந்த கொண்டவிதத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பவனிடமே காட்டி விடுகிறார்.

உண்மை என்ன என்பதை அறியாத பவன், கோவிந்தை தாக்க.. இருவருக்குள்ளும் கை கலப்பு ஏற்படுகிறது. இதில் கோவிந்த் கொல்லப்பட.. பவன் சிறைக்குச் செல்கிறான். பவனின் மனைவியும் அவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட.. சிறையில் வாடும் பவன் உண்மையை அறிந்தாரா..? ராஜேந்திரனின் கதி என்ன ஆனது..? பவன் மனைவியோடு சேர்ந்தாரா என்பதெல்லாம் அடுத்து 3 அரைமணி நேர எபிசோடுகளாக வரக் கூடிய திரைக்கதை..!

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்கள்.. அங்கு நடக்கக் கூடிய இயல்பான விஷயங்கள்.. மீனவக் குப்பத்து ஜனங்களின் அன்றாட வாழ்க்கை.. ஏழைகளுக்கு நெருக்கடிகள் ஏற்படும் நேரம்.. குடி ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதையெல்லாம் பதை, பதைப்புடன் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

நல்லதொரு நட்பு, சந்தேகம் என்ற ஒரு சொல்லால் காயம்பட்டு அவரவர் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.

நான் கடவுள் ராஜேந்திரனின் திட்டம்.. அவர் பேசும் பேச்சு.. அது தொடர்பான காட்சிகள் இயல்பானதாக அமைந்தும், வீடியோ காட்சி மட்டும் டிவி சீரியல்போல் செயற்கைத்தனமாக மாறியிருந்தது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பவன்.. நிறைய படங்களில் ஹீரோ என்றில்லாமல் பல வேடங்களில் நடித்து வருகிறார். இதிலும் ஒரு மீனவனாக.. சராசரி மனிதனாக.. குடிகாரனாக.. என்று பல்வேறு விதங்களில் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். குறையொன்றுமில்லை.

கோவிந்தாக நடித்தவர் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் தனது பணியை நல்லவிதமாகவே செய்திருக்கிறார். அவரைக் காதலிக்கும் ஹீரோயின் உமா, பாடல் காட்சிகளுக்கும், சில உச்சுக் கொட்ட வைக்கும் காட்சிகளுக்காகவும் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

பவனின் மனைவியாக நடித்திருக்கும் சத்யஸ்ரீ சமீபமாக பல படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். மிக இயல்பாகவே நடித்திருக்கிறார். வீடியோவை ஆஃப் செய்யும்படி வெட்கத்துடன் பவனிடம் கெஞ்சியபடியே ரொமான்ஸையும் கொட்டியிருக்கிறார். ‘ராஜதந்திரம்’ படத்திலும் செமத்தியான ரோலில் நடித்திருந்தார் இவர்.

சந்தேகமேயில்லாமல் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான் இந்தப் படத்தில் அதிகச் சம்பளம் வாங்கியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

மொட்டைத் தலையில் விக் வைத்துக் கொண்டும், கலர் கலரான உடைகளை அணிந்தும், கூலிங் கிளாஸ் அணிந்தும் இவர் போடும் ஆட்டங்களும், பாட்டங்களும் படத்தின் முற்பாதியில் படத்தை வேகமாக நகர்த்துகின்றன. இவரது மிகப் பெரிய பலமே இவர் வில்லனா, ஹீரோவா, குணச்சித்திர நடிகரா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் இவரது வாய்ஸ் மாடுலஷேன்ஸ்தான்..

கிளைமாக்ஸில் ஜெயிலில் நடக்கும் சண்டையில் ஹீரோ பவன், ராஜேந்திரனை அடித்து, உதைத்து, துவைத்து காயப்போடும் காட்சியில் வேறெந்த நடிகராவது நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்..  ராஜேந்திரன் ஸார் சல்யூட் டூ யூ..!

எழில் அரசனின் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மகேந்திரனின் இசையில் ‘பச்சைக்கிளி பச்சைக்கிளி முனியம்மா’ பாடல் கும்மாங்குத்து. ‘கஜலு பாவா’ பாடலும், ‘உன்னால் மயிலே இருப்பது ஜெயிலே’ என்கிற கானா பாலாவின் சிச்சுவேஷனுக்கேத்த சோகப் பாடலும் கேட்கும்படிதான் இருந்தன.

பின்னணி இசைதான் காதைக் கிழித்துவிட்டது. அதிலும் பவன்-ராஜேந்திரன் சண்டை காட்சியில் மொத்தமாக எத்தனை பன்ச்சுகளை சொருகினார்களோ தெரியவில்லை.. பத்து நிமிடங்களுக்கு நமது காது பஞ்சர்தான்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த நடிகர், நடிகைகளை வைத்து கதைக்கேற்ற திரைக்கதையில் படத்தினை நிறைவாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Our Score