ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் ‘கஜினிகாந்த்’ என்னும் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முதல் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது.
ரஜினிகாந்தை இமிடேட் செய்யும்விதமாகத்தான் ‘கஜினிகாந்த்’ என்னும் தலைப்பிட்ட இந்தப் படத்தின் பெயரை அவருடைய பிறந்த நாளன்றே, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டிருப்பதாக திரையுலகில் பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள்.
‘தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி புகழ், பணம் சம்பாதிக்க நினைக்கிறார்’ என்று ரஜினியின் ரசிகர்கள் நினைத்து அவர் மீது கோபப்பட்டு, சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரான ராதாகிருஷ்ணனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கை இது :
“முதலில் இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் பெருமை.. இந்திய சினிமாவின் உச்சம்.. உலகளவில் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும்விதமாக ‘கஜினிகாந்த்’ என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டு மொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘ரஜினிகாந்த்’ என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையைத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு, அடையாளம், நம்பிக்கை. இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவையும், அதன் வர்த்தகத்தையும் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்ற உச்ச நட்சத்திரம் அவர்.
இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய சினிமா தாண்டி, உலக அளவில் கலைஞர்களும் தலைவர்களும் வாழ்த்தியும் கொண்டாடியும் மகிழும் இந்தத் தருணத்தை அசிங்கப்படுத்தும் நோக்கில், அவர் பெயரின் முதல் எழுத்தைத் திரித்து ‘கஜினிகாந்த்’ என தான் தயாரிக்கும் ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் திரு ரஜினிகாந்த். அவரை அவமதிக்கும் இந்தத் தலைப்பை நடிகர் சங்கம் எப்படி மௌனமான அனுமதிக்கிறது..? ரஜினி ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஆர்யா, இந்தப் படத்தில் நடிப்பது எத்தனை கபடமான செயல்..!
சமூக அக்கறையும் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துவதில் ஆர்வமும் காட்டும் மூத்த கலைஞர் சிவகுமார் போன்றவர்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்…? இந்த நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான உலக நாயகன் கமல்ஹாஸன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்..?
மேலும் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘பல்லு படாம பாத்துக்கணும்’, ‘பஜனைக்கு வாங்க’ போன்ற கேவலமான தலைப்புகளை வைத்து மூன்றாம் தர செக்ஸ் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காமல் அனுமதிப்பது வேதனை அளிக்கிறது.
இனி இது போன்ற தலைப்புகளை தமிழ் சினிமாவில் யாருக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்…” என்று தனது அறிக்கையில் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.