காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிகளே.
‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படம் வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள VFX காட்சிகளை உலகத் தரத்துடன் அமைக்க வேண்டும் என்பதற்காக படக் குழு அதிகமாக மெனக்கெட்டது. அதன் காரணமாகவே இப்படத்தின் வெளியீட்டுக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
மேலும், இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை இப்படக்குழு மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும்விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கியிருக்கிறார்களாம்.
படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும்.
வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.