இந்த உலகத்தின் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள்தான் என்று எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் குறிப்பிடுவார்கள். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளைவிட பொண்ணுக்காக நடந்த சண்டைகள்தான் இங்கே அதிகம்.
அப்படிப்பட்ட வழக்கத்தில் பேசுவதற்காகவே பொண்ணு தேடியலையும் ஒரு வித்தியாசமான கான்செப்ட்டுடன் புதிய படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் ‘கடலை போட பொண்ணு வேணும்’.
ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மனீஷா. இவர்களைத் தவிர படவா கோபி, லொள்ளு சபா சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர், ஃபைட்டர் தினா என்று ஒரு பெரிய காமெடி பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – இ.என்.ஜே.ஹரீஷ். இசை – சுதர்சன், படத் தொகுப்பு வில்சி. தயாரிப்பு – ஆர்ஜி மீடியா சார்பில் ராபின்சன்.
மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னைக்கு போனால் தன்னோட ஆசை நிறைவேறிரும்னு நினைச்சு சென்னைக்கு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா.. இல்லையா..? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும், யதார்த்தத்தோடும் சொல்ல வருகிறது இந்த ‘கடலைபோட பொண்ணு வேணும்’ திரைப்படம்.
தன்னுடைய முதல் படமான ’ரீங்காரம்’ ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே ’கடலை போட பொண்ணு வேணும்’ என்ற இந்தப் படத்தையும் முடித்துவிட்டு அடுத்து மூன்றாவது படமான ‘பலசாலி’ என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குநர்களிடம் பணிபுரிந்தவர்.
‘ரீங்காரம்’ படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த தயாரிப்பாளர்தான் ’கடலைபோட பொண்ணு வேணும்’ படத்திற்கும் தயாரிப்பாளராக மாறிப் போனார். அந்த படப்பிடிப்பில் இயக்குநரின் திறமையைப் பார்த்து அவருக்குக் கிடைத்த படம்தான் இந்த ’கடலை போட பொண்ணு வேணும்’.
எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்வகையில், ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது ’கடலைபோட பொண்ணு வேணும்’ படம்.