full screen background image

“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து

“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத் தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சிபிராஜ், நடிகை நந்திதா ஸ்வேதா, நடிகர் ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இந்தக் கபடதாரி’ படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.

ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால்தான் படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். படம் தொடங்கியவுடன் இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது.

இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்கத்தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ்தான் என்னிடம் “நானே நடிக்கிறேன்..” என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று… சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இந்தப் படத்திற்காக நிச்சயமாகப் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் நிச்சயமாக முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தில் அவருடைய பின்னணி இசை அமைந்துள்ளது.

எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் எனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். எங்களை வாழ்த்துவதற்காக அவரும் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்களில் பணியாற்ற இருக்கிறோம். ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல; சிபிக்கும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.

கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, “என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில் இருக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் முன்னேற யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் என் முன்னேற்றத்தில் தனஞ்செயன் சாரும் முக்கியமானவர்.

ஒரு முறை தனஞ்செயன் சார் போன் செய்து, இப்படி ஒரு படம் இருக்கிறது.. நீங்க டைரக்ட் செய்றீங்களா..?” என்று கேட்டார். படத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது. உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் சாரின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல். பேசும்போது, “முதலில் தயாரிப்பாளர்கள் லலிதா மேடத்திற்கும், தனஞ்செயன் சாருக்கும் என நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று கூறி என்னைப் படத்தைப் பார்க்க சொன்னார்கள். படத்தை பார்த்ததும் ரொம்ப எக்சைட்மெண்டாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக, வித்தியாசமான பேட்டர்னில் இருந்தது. படத் தொகுப்புக்கான ஒரு படமாக இருந்தது. உடனே இயக்குநரை சந்தித்தேன். அவரை பார்க்கும்போது டெரரானவரைப் போல் இருந்தார். ஆனால், பழகும்போதுதான் அவர் ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார். அவருடன் பயணித்த இந்த ஆறு மாதத்தில் எனக்கு ஆன்மீகம் பற்றியும் நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.

இதுவொரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம். ரொம்ப சுவாரஸ்யம் நிறைந்த படமாக வந்துள்ளது. சிபி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். அவர் முதுகில்தான் முழுப் படமும் நகர்கிறது. ஜே.எஸ்.கே சார், ஜெயப்பிரகாஷ் சார், நாசர் சார் என அனைவரது கதாப்பாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் ஒரு ட்விஸ்ட் இருந்து கொண்டே இருக்கும். அது ரசிகர்களை எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி கொண்டே இருக்கும். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும்…” என்றார்.

படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் பேசியதாவது, “நான் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் படம் விறுவிறுபாக நகர்ந்துக் கொண்டிருப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வியையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தும்விதத்தில் உள்ளது.

இந்த படத்தின் மிகப் பெரிய பலம் என்றால் அது இசையமைப்பாளர் சைமன் கே.கிங்குதான். அவரது பணி மிக சிறப்பாக வந்துள்ளது. சிபிராஜ் ரொம்ப பிட்டாக இருக்கிறார். டைலர் மேட் ரோல் என்று சொல்லும் அளவுக்கு அவர் படம் முழுவதும் பிட்டாக இருக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், நந்திதா என அனைத்து நடிகர்களின் கதாப்பாத்திரமும் கச்சிதமாக உள்ளது. இந்த படம் கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படமாகும். தமிழில் அதைவிடவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். நிச்சயமாக இந்தக் ‘கபடதாரி’ அனைவருக்கும் திருப்தியளிக்க கூடிய படமாக அமையும்.” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசும்போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு பதிப்பிலும் நான் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப பிஸியாக நடித்த படம் இதுதான்.

படம் முழுவதும் நான் மகிழ்ச்சியாக பணிபுரிந்திருக்கிறேன். ஹீரோ சிபி சாருடன்தான் என் கதாப்பாத்திரம் பயணிக்கும். அவருக்கும் எனக்கும் இடையே ஒரு பிக்‌ஷன் இருந்துக் கொண்டே இருக்கும். மொத்தத்தில், நான் முழு திருப்தியுடன் நடித்த படம் இது..” என்றார்.

இசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசும்போது, “இந்த படக் குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் நான் இசையமத்திருப்பது புதிய அனுபவமாக உள்ளது. தெலுங்கிற்கு வேறு நடிகர்கள், தமிழுக்கு வேறு நடிகர்கள். முக்கியமாக நாசர் சாருக்கு ஒரு பாடல் இருக்கிறது. அழகிய மொலோடியாக அந்த பாடல் இருக்கும்.

பின்னணி இசையை பொருத்தவரை கதைக்கு ஏற்றாவாறுதான் இருக்கும். பாடலாகட்டும், பின்னணி இசையாகட்டும்.. படத்திற்கு எது தேவையோ அதைத்தான் கொடுத்திருக்கிறோம். அதை தவிர்த்து எதையும் முயற்சிக்கவில்லை.

இந்தப் படத்தின் ரெக்கார்டிங் பணியும் ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஸ்கைப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் ரெக்கார்டிங் செய்தோம். ஆனால், அனைத்தும் தரமாக உள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. நிச்சயம் திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசுகையில், “எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்கக் கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன். அப்படி ஒரு கதாப்பாத்திரம்தான் நான் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரம்.

இந்த படத்தை நான் கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்பவும் சிறப்பான படம்.  இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இயக்குநர் பிரதீப்பிடம் எமோஷனல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

படத்தில் எனக்கும் சிபிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியைவிட ஜெயப்பிரகாஷ் சாருக்கும், எனக்கும் இடையேதான் நல்ல கெமிஸ்ட்ரி. அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அப்பாவாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த பந்தம் இப்போதும் தொடர்கிறது. அவரை நான் அப்பா’ என்றுதான் அழைப்பேன்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்ததும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும், சிபி இருந்தால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள்…” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “சினிமா என்னாகுமோ, ஏதாகுமோ.. திரையரங்குகள் திறக்கப்படுமா.. மக்கள் கூட்டம் வருமா.. என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்தது.

ஆனால், மாஸ்டர்’ என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்றுவரை சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம்தான் இப்போது சினிமாத் துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

அந்த படம் கொடுத்த தைரியத்தில்தான் இன்று கபடதாரி’ ரிலீஸ் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், கொரோனா காலக்கட்டத்தில், தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார்தான். அவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபியும் இந்த படத்திற்காக சம்பளக் குறைப்பினை செய்திருக்கிறார். சிபி இந்தப் படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார். சிபி ஒரு நல்ல நடிகர். மிகப் பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியால்தான் திரையுலகத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.

சினிமா கஷ்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசியதாவது, “தயாரிப்பாளர் டி.சிவா சார் சொன்னது போல, இந்தக் கபடதாரி’ திரைப்படம் வரும் ஜனவரி 28-ம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ படங்கள்தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் அந்தப் படக் குழுவினர்களுக்கு இந்தப் படக் குழுவின் சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கபடதாரி’ படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை நானும் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே, தனஞ்செயன் சாரை தொடர்பு கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள்.. எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம்.. என்றேன்.

ஆனால், அவர் நான்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறேன் என்று கூறி மறுத்துவிட்டார். அப்படின்னா நானே இதில் நடிக்கிறேன் சார் என்று சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என் உள் மனது இந்த படம் நமக்குத்தான் வரும் என்று கூறியது. அதேபோன்று கடைசியில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது. அவரால்தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன், ரொம்ப நன்றி சார்.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. பொதுவாக ரீமேக் படம் செய்யும்போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பார்கள். இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப்.

நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது, ஏற்கனவே அவருடன் பணியாற்றியதால், நாங்கள் வைத்திருந்த மீட்டரிலேயே நடித்தேன். ஆனால், அதை அவர் சற்று மாற்றி வேறு ஒரு விதத்தில் என்னை நடிக்க வைத்தார். அது எனக்கு நாசர் சார் போன்ற ஜாம்பவனுடன் இணைந்து நடிப்பதற்கு ஈசியாக இருந்தது. அதேபோல் ஜெயப்பிரகாஷ் சார், நந்திதா ஆகியோருடன் நடித்து நன்றாக இருந்தது.

அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்றுதான் எடுக்கிறோம். அப்படித்தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக் நேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தின் நாயகனான சிபி ரொம்பவும் இனிமையான மனிதர். மிகப் பெரிய நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாகவும் பழகுவார்.

இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக தெலுங்கிலும் அவர் அறிமுகமாகுகிறார். அதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும்ம் எனது வாழ்த்துகள். எப்போதுமே எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவரும் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.

படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே. சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக் குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர்’ போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது.

மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம்தான். நிச்சயம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றி பெறும்…” என்றார்.

சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றதோடு, மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score