பிக்பாஸ்-4 சீஸனின் வின்னரான ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம் துவங்கியுள்ளது.
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுப்பையாவும், அபின் ஃபிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
‘மாயா’, ‘நெடுஞ்சாலை’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இசை – ஸ்டெர்லின் நித்தியா, ஒளிப்பதிவு – பி.வி.கார்த்திக், கலை இயக்கம் – கமலநாதன், பாடல்கள் – விவேக், படத் தொகுப்பு – அருள் சித்தார்த், சண்டை இயக்கம் – சக்தி சரவணன், நிர்வாகத் தயாரிப்பு – விசுவநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களாக படத் தொகுப்பாளராகவும், இந்தியாவில் செலிபிரிட்டி போட்டோகிராபராகவும் வலம் வந்து கொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநராக அறிமுகமாகிறார்.
முதல்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதினால் நடிகர் ஆரி அர்ஜுனன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
இன்று நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அறிமுக இயக்குநரான அபின் மீது தான் வைத்திருக்கும் எல்லையில்லா அன்பினாலும், கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படக் குழுவை வாழ்த்தினார்கள்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.
இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி, சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது.


