இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்பை பெற்றுள்ளது..!
இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2016 ஜூலை மாதம் வெளியாகி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று வெளியாகிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் 50 நொடி காட்சி வீடியோவான ‘காற்று வெளியிடை க்ளிம்ப்ஸ்’ ரசிகர்களிடையே மேலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் k.P.A.C.லலிதா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், R.J. பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘டேவிட்’ புகழ் பிஜாய் நம்பியார் இப்படத்தின் க்ரியேடிவ் தயாரிப்பாளர்.
‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இணைந்த மணிரத்தினம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி தங்களுடைய 25-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. மணிரத்தினம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் சில்வர் ஜுபிலி படைப்பு ‘காற்று வெளியிடை’.
இதுவரை இக்கூட்டணி 15 திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளது. ‘காற்று வெளியிடை’ க்ளிம்ப்ஸ் வீடியோவில் இடம் பெற்ற சில அழகியல் காட்சிகள் நமக்கு இவ்வெற்றிக் கூட்டணியின் ‘ரோஜா’ திரைப்படத்தை நமக்கு சில இடங்களில் நினைவூட்டியது.
மனதை அள்ளும் வகையில் பனி படர்ந்த ரோட்டில் செல்லும் பேருந்து. வானிலிருந்து விழும் பணிகட்டிகளுக்கு இடையே அப்பேருந்தில் இருந்து தன்னுடைய முகத்தை அழகாக திருப்பி காட்டும் கதாநாயகி அதீதி ராவ் ஹைதாரி.
அதே தருணத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பின்னால் ஒலிக்கும் ‘வான் வருவான்’ பாடல். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் மாயாஜால ஒளிப்பதிவில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த 50 நொடி காட்சியே ‘காற்று வெளியிடை’ நமக்கு இந்த வருடத்தின் ஆக சிறந்த விசுவல் ட்ரீட்டாக இருக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.
நாயகன் கார்த்தி நடந்து செல்லும் காட்சி ஆகட்டும், நாயகி அதீதி ராவ் ஹைதாரியின் க்ளோஸ் அப் காட்சியாகட்டும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு.
‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் 50 நொடி காட்சியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்றால் படத்தில் நாம் ரசித்து காதலில் விழ இன்னும் எவ்வளவு காட்சிகள் இருக்கும்..? ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்..!
இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இப்படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.