‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரிக்கிறது.
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நட்சத்திர நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீகிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத் தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ஏ.எம்.செந்தமிழன்(ஒலி வடிவமைப்பு), அபிநந்தினி(ஆடை வடிவமைப்பு), தண்டோரா சந்துரு(பப்ளிசிட்டி டிசைனிங்), சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ. நாசர்(பத்திரிக்கை தொடர்பு), நானல் நரேஷ்(தயாரிப்பு நிர்வாகி), சீனிவாசன் (தயாரிப்பு மேலாளர்), பிரகாஷ் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் பலர்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாம்.
இந்த ‘ஜமா’ படம் பற்றி இயக்குநர் பாரி இளவளழகன் பேசும்போது. “ஜமா என்ற தலைப்பு தெருக் கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின்போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்தின் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
படத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, நிஜ வாழ்க்கை தெரு நாடகக் கலைஞர்கள் படப்பிடிப்பு தொடங்கும் முன் ஒத்திகைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. ‘அவதாரம்’ படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளார்..” என்றார்.
முழுப் படமும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.









