2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஜாக்பாட்’. இயக்குநர் கல்யாண் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார்.
வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள ரெசிடென்ஸி நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் நடைபெற்றது.
விழாவில் படத்தின் படத் தொகுப்பாளரான விஜய் வேலுகுட்டி பேசும்போது, “இந்தப் படத்தில் வேலை செய்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளையை உடனேயே கொடுப்பார். ‘ஜாக்பாட்’ படத்தின் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ‘ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது’ என்றார்கள். இந்த பாராட்டே எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது..” என்றார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசும்போது, “படத்தின் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருந்தது. சூட்டிங்கில் காட்சிகளைப் படமாக்கும்போது நாங்களே பல முறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். சூர்யா சாரும் படத்தை பார்த்துவிட்டு எங்களை பெரிதும் பாராட்டினார். அவருக்கும் எனது நன்றி..” என்றார்.
படத்தின் சண்டை இயக்குநர் ராக் பிரபு பேசும்போது, “இயக்குநர் கல்யாணம் ஸாரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்ஷன் படம் என்று சொல்லும் அளவிற்கு சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கிறது..” என்றார்.
படத்தின் உடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி பேசும்போது, “இது எங்களுடைய குடும்பத் தயாரிப்பு. இயக்குநர் கல்யாண் ஸார் மிக வேகமாக டே அண்ட் நைட்டாக பிரேக்கூட எடுக்காமல் ஷூட் செய்து மிகக் குறைந்த நாட்களில் படத்தை முடித்துள்ளார்.
ஜோதிகா மேடம் தன்னுடைய டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம்ஸ் எல்லாம் சும்மாதான் இருந்தது. அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்…” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெகன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். ஆனால், நான் நடித்த இரண்டு நாட்களும் மிகவும் ரசித்து செய்தேன். ஜோதிகா மேடத்திற்குத் தகுதியான படம் இது. ரொம்பவும் இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. அவர் தவமாகப் பெற்ற வரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா..” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர் தங்கதுரை பேசும்போது, ” சூர்யா சார் தயாரிப்பில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 30 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா..? அதேமாதிரி 30 நாட்களில் எப்படி படம் எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு வேகமாகப் படத்தை முடித்துள்ளார்..” என்றார்.
நடிகர் டேனியல் பேசும்போது, “இந்த ‘ஜாக்பாட்’ படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நான்கு படங்களில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை.
சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சீனியைப் பயன்படுத்தாமல் நாட்டுச் சக்கரைதான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம்தான். இயக்குநர் கல்யாண் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பேய்த்தனமாக இந்தப் படத்தில் உழைத்திருக்கிறார்..” என்றார்.
படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கும் சூர்யாவின் சகோதரியான பிருந்தா பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்களை மிகவும் அனுபவித்துப் பாடினோம். நான் பாடும்போது ஆடிக் கொண்டேதான் பாடினேன்…” என்றார்.
பாடகர் ஆண்டனி தாசன் பேசும்போது, “பாடகராக நான் நிறைய விருதுகள் வாங்குவதற்கு காரணம் சூர்யா சார்தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல்தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளேன்” என்றார்.
பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பேசும்போது, “இந்தப் படத்துக்காக பாட்டெழுதி முடித்ததும் அதைப் படித்துவிட்டு ‘பாட்டு ரொம்ப நல்லா இருக்கு’ என்று கோ-புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல்முதலாக பாட்டெழுதிய உடனேயே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து போன் செய்து பாராட்டினார்கள் என்றால், அது இந்த 2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில்தான்.
நான் சூர்யா சாரின் ‘ஆயுத எழுத்து’ படத்தைப் பார்த்த பின்புதான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் தீவிர ரசிகன் நான். சமீபத்தில் கல்விக் கொள்கை பற்றி சூர்யா சார் தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்…” என்றார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசும்போது, “2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் இந்தப் படத்திற்கு இசையமைக்கக் கேட்ட பொழுதே எனக்கு பெரும் சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் தொண்ணூறுகளின் இளைஞர்களின் தேவதை. இந்தப் படத்தில் நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப் படத்தில் இருக்கிறது. ரொம்பவும் ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது. அந்த அளவுக்குக் கடுமையாக உழைத்திருக்கிறார்..” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகை சச்சு பேசும்போது, “இயக்குநர் கல்யாண் என்னிடம் ‘இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் நீங்க பண்ணனும்மா..’ என்றார். நான் முதலில் மறுத்துவிட்டேன். பிறகு யோசித்தேன். தயாரிப்பு சிவக்குமாரின் குடும்பம். சிவக்குமாரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடுதான் இன்னமும் நடிக்காமல் இருக்கோம். அதனால் இந்தப் படத்தில் நடித்து அந்தக் கவலையைப் போக்கிவிடுவோம் என்று நினைத்துதான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். சூர்யா எங்கள் முதலாளி. அவர் இந்தப் படத்தின் மூலமாகப் பெரிதாக ஜெயிக்க வேண்டும்..” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “‘தேவா’ படத்தில விஜய்கூட நடிச்சேன். அந்தப் படத்துல சிவக்குமார் ஐயாவும் கூட நடிச்சார். அந்த ஷூட்டிங்ல பிரேம்ல கொஞ்சம் தள்ளி நின்றால்கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார்.
அப்பேர்ப்பட்ட சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை தயாரித்து வரும்போது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஜோதிகாவைப் பார்க்கும்போது ராஜராஜ மன்னன்போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். ஜோதிகாவைப் பார்த்ததும் எனக்கு பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் ‘குஷி’ படத்தில் பட்டபாடு நமக்குத்தான் தெரியுமே.
கல்யாண் மிகப் பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப் படம் எனக்கொரு நல்ல அனுபவம்.
இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறுவதோடு பல விருதுகளையும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக் கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அரசின் காதுகளுக்குக் கேட்கும்…” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் சக்திவேல் பேசும்போது, “ஒரு படத்தின் வெற்றி என்பது முதல் நாள், முதல் காட்சியில்தான் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு இப்போதே தெரிந்துவிட்டது. ஏனென்றால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் இந்தப் படம் பற்றியும், வியாபாரம் பற்றியும் எங்களுக்கு போன் செய்து கேட்கிறார்கள். இந்தப் படம் அந்த அளவுக்கு நல்லா வந்திருக்கு.
ஜோதிகா மேடம் நடித்ததிலேயே இந்தப் படம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை நான் மிகவும் பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக இன்னும் வேகமாக ஓடுவோம்…” என்றார்.
படத்தின் இயக்குநர் கல்யாண் பேசும்போது, “எனக்கு பெரிய ‘ஜாக்பாட்’ என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட்தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன்களைத்தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் ‘உடனே சூட்டிங் போகலாம்’ என்றார்.
படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும், பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். ஸ்பாட்டில் சூர்யாதான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார் ஜோதிகா மேடம். விஷால் சந்திரசேகர் போன்ற பவர்புல்லான ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்குக் கிடைத்தது மிகப் பெரிய பலம்..” என்றார்.
நடிகர் சூர்யா பேசும்போது, “இன்றைய ஹீரோ படத்தின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகர்தான். ஜோதான் என்னுடைய ‘ஜாக்பாட்’. 100 சதவிகிதம், 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமைஸூம் இல்லாமல் சரியாகச் செய்யும் அம்மாதான் ஜோதிகா.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்துதான் தேர்வு செய்கிறார். ஜோதிகாவுக்கு இந்தப் படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து ஜோ எப்படி இதையெல்லாம் செய்தார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறு மாதங்கள் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.
தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது, ” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஒரு ‘ஜாக்பாட்’டுதான். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு, வேறு எந்தக் கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை.
2D எண்டெர்டெயின்மெண்ட் பெயரிலேயே ‘எண்டெர்டெயின்மெண்ட்’ இருக்கு. எங்கள் கதைகளில் எழுபது சதவிகிதம் கமர்சியல் இருக்கும். மீதி முப்பது சதவிகிதம் மெசேஜ் இருக்கும். இயக்குநர் கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்…” என்றார்.
படத்தின் நாயகியான நடிகை ஜோதிகா பேசும்போது, “முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறேன்.
இது எனக்கு ரொம்பவும் புதிதான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்காக கல்யாண் சாருக்கு நன்றி. இப்போதைய ஹீரோக்கள் என்னன்ன பண்றாங்களோ அது எல்லாவற்றையும் எங்களையும் இந்தப் படத்தில் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. பெண்களுக்கு சக்தியூட்டுவதுபோல இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். அந்த அளவுக்குக் கடுமையாக உழைத்திருக்கிறோம்.
என்னுடைய ‘ஜாக்பாட்’டும் சூர்யாதான். அவர்தான் என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. இந்தப் படத்தில் நான் போட்ட சண்டைக் காட்சிகளுக்கான உபகரணங்களை, சூர்யாதான் எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
பெரும்பாலும் நடிகைகள் நடித்தப் படங்களை, அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடுதான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய, பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு இங்கே சொல்லிக் கொள்கிறேன்…” என்றார்.