சியான் விக்ரமின் நடிப்பில் ஷிபு தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘இருமுகன்’ படம் மாபெரும் வெற்றி பெற்று தற்போது தமிழகமெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு படக் குழுவினர் நேற்று ஊடகங்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘இருமுகன்’ நாயகன் விக்ரம், இயக்குநர் ஆனந்த் ஷங்கர், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், விநியோகஸ்தர் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜ், படத் தொகுப்பாளர் புவன் சீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“கலைஞர்களின் ஒத்துழைப்பால்தான் வெற்றி பெற முடிந்தது..!”
அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் சிபு தமீன், “விக்ரம் சார் தயாரிப்பாளர்களின் நடிகர். ஆனந்த் சங்கர் தயாரிப்பாளர்களின் இயக்குநர். சொன்ன பட்ஜெட்டில், சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்தார். நயன்தாரா அக்கறையுடன் நடித்து ஒத்துழைத்தார். இப்படி நல்ல கலைஞர்களின் ஒத்துழைப்பால்தான் இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்து வெற்றியும் பெற்றிருக்கிறது..” என்றார்.
“வெறும் இசைக்கே கை தட்டல் கிடைத்திருக்கிறது..!”
இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது, “இந்தப் படத்தை நல்ல வணிக ரீதியிலான படமாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எடுத்தோம். என் நோக்கமும் இதுதான். விக்ரம் சார் ‘அரிமா நம்பி’ பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டினார். அப்போது, ‘ஏதாவது கதை லைன் இருக்கிறதா..?’ என்றார். அப்போது நான் ஏதோ உளறினேன். அவரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர்தான் இதற்கு இன்ஸ்பிரேஷன்.
தயாரிப்பாளர் சிபு டிசம்பரில்தான் எங்களோடு இணைந்தார். அவர்தான் படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கினார். ஜனவரியில் படத்தைத் துவக்கிவிட்டோம். இதோ செப்டம்பரில் வெளியிட்டு விட்டோம். கால அளவு குறைவு. எல்லோரும் பறக்க, பறக்க ஓடினோம். எல்லாருக்கும் பெயர் சொல்ல வாய்ப்பு இருந்தது. கதை இல்லாத காட்சிகளில்கூட இசைக்கு கைதட்டல் கிடைத்தது. இப்படி ரசிகர்களுக்குப் பிடித்த படமாகி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி…” என்றார்.
“விமானத்தில் பயணிக்கும்போதே இசையமைத்தேன்”
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும்போது, “முதலில் இயக்குநர் பெயரைச் சொன்னதும் பாதி சம்மதம். பிறகு நடிப்பவர் விக்ரம் என்றதும், முழு சம்மதம் சொன்னேன். இதில் அவரைத் தவிர யாரும் செய்ய முடியாது. கதை சொல்லும்போதே ‘லவ்’ பாத்திரத்தில் விக்ரமை பொருத்தி மனக்கண்ணில் படம் பார்த்தேன். படத்தில் எல்லாருமே சிக்சர் அடிப்பார்கள் என்று தெரிந்தது.
எனக்கு ‘அந்நியன்’, ‘கஜினி’க்குப் பிறகு சவாலான படம் இந்த ‘இருமுகன்’. விக்ரமின் இரண்டு பாத்திரங்களுக்கும் தனித்தனியாக இசையமைத்தேன்.
படத்தின் துவக்கத்தில் சிபு சிரமப்பட்டார். நான்தான் ஊக்கம் கொடுத்தேன். பைபிளில் ‘சம்பூர்ணம்’ என்றொரு வார்த்தை வரும். அப்படி எல்லாமே முழுமையாக நல்லபடியாக முடிந்தது. படம் பேசி முடித்த இரண்டாவது நாளே ஜெர்மனி கிளம்பினேன்.
புறப்பட்ட சமயத்தில் சிபு வந்து ‘டீஸர் வேண்டும்’ என்றார். ‘அதைத் தந்தால் அது படத்தின் விளம்பரத்துக்கு உதவும்..’ என்றார். ‘பாட்டே ஆரம்பிக்கலை.. அதற்குள் டீஸரா?’ என்று பயந்தே விட்டேன். ஆனாலும் என்ன செய்வது..? ஒரு கீபோர்டும் லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு போனேன்.
விமானப் பயணம் பத்தரை மணிநேரம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் அந்தப் பயணத்தின்போது தூங்கவேயில்லை. ஜெர்மனி போவதற்குள் டீஸரை தயார் செய்துவிட்டேன். விமானத்தில் என்னை ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வினோதமாகப் பார்த்தார்கள். சந்தேகமாகப் பார்த்தார்கள். கடைசியில் அவர்களிடமே டீஸரைப் போட்டுக் காட்டினேன். பைலட்டுகளை அழைத்து வந்து காட்டி பெருமைப்படுத்தனார்கள்..” என்றார் பெருமிதமாக.
“நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி”
இந்த வெற்றி சந்திப்பில் விக்ரம் பேசும்போது, “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. ஆதரவு தந்த ஊடகங்களுக்கும் நன்றி. படத்தைப் பொறுத்தவரை நான் மூன்று பேருக்கு முக்கியமாக நன்றி கூறவேண்டும்.
ஒரு நடிகனுக்கு அவன் நடித்த கடைசிப் படம்தான் மிக முக்கியம். அதன் கதாபாத்திரம்தான் அவனுக்கு முகவரியாக இருக்கும். ‘இருமுகன் ‘ படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு முதல் நன்றி.
அவரது சிறப்பான தனி குணம் எல்லாரையும் அவர்களின் போக்கில் செயல்படவிட்டு அவர்களிடமுள்ள சிறப்பான விஷயத்தை வெளிப்படுத்த வைப்பதுதான். அப்படி அவர் எல்லாருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். நித்யா மேனன்கூட ‘இந்த வசனத்தை இப்படி பேசலாமா?’ என்று எனக்கு போனில் கேட்பார். அந்த அளவுக்கு எல்லாரையும் தங்கள் சொந்தப் படம் போல நினைக்க வைத்தார்.
நான் இதில் நடித்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படாதபடி, ஒன்றின் நிழல் இன்னொன்றின் மீது விழாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவர் கொடுத்த சுதந்திரத்தில் தினசரி படப்பிடிப்புக்கு முழு பலத்துடன் போவேன்.
‘நடித்த இரண்டு பாத்திரங்களில் இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது..? எந்த கேரக்டரில் நடிக்கும்போது சிரமப்பட்டீர்கள்..?’ என்று பத்திரிகை நண்பர்கள் பலரும் கேட்டார்கள். எனக்கு இரண்டுமே ஒன்றுதான். எனக்கு இரண்டுமே முக்கியம்தான்.
ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி. நன்றாகக் கதை சொன்னார். அவர் கதை சொல்லும்போதே எங்கே ரசிகர்கள் சிரிப்பார்கள். எங்கே ரசிகர்கள் கை தட்டுவார்கள் என்பதை எல்லாம் திட்டமிட்டு செய்வார்.
தயாரிப்பாளர் சிபுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. பத்து மாதங்களாக இந்தப் படம் நடக்குமா நடக்காதா என்கிற கவலை இருந்தது. ஆனால் இரண்டே நாளில் முடிவு செய்து எல்லாவற்றையும் மாற்றினார். இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போது எல்லாமே கனவு போல இருக்கிறது.
இந்தப் படத்துக்காக ஹரிஸ் ஜெயராஜ் பறந்து பறந்து வேலை பார்த்தார். ஒரு டீஸருக்கு, ட்ரெய்லருக்கு இவ்வளவு உழைப்பா என வியந்தேன். ‘சாமுராய்’ முதல் நாங்கள் இணைந்து பயணிக்கிறோம். அந்தப் படத்துக்குப் போட்ட ‘மூங்கில் காடுகளே’ பாட்டுதான் இன்றும் என் காலர் ட்யூன். பிறகு ‘அருள்’ ,’பீமா’ ,’அந்நியன்’ என்று இணைந்தோம். இப்போது ‘இருமுகன்’ மறக்க முடியாதது. அவருக்கும் எனது நன்றி.
இந்தப் படக் குழுவில் இருக்கும்போது மணிரத்னம். ஷங்கர் போன்ற பெரிய படக் குழுவில் இருப்பது போல உணர்ந்தேன். பெரிய, பெரிய ஆட்களாகவே எல்லாருமே இருந்தார்கள். அப்படிப்பட்ட படக் குழுவினருக்கு எனது நன்றிகள்.
கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜ் போட்ட செட் பிரமாண்டமாக இருந்தது. மிரண்டுவிட்டேன். எளிமையான பொருட்களைக் கொண்டே செய்து அசத்தியிருந்தார். செட்டுக்குள் முதல் முறையாக நுழைந்தபோதே இப்படியெல்லாம் செட்டுகள் அமைக்க முடியுமா என்கிற கேள்வியே எனக்குள் எழுந்தது. அந்த அளவுக்கு அவருடைய உழைப்பு இருந்தது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.
பொதுவாக, படத்தில் நடிப்பவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருப்பார்கள். ஆனால் கடைசியில் எடிட்டிங்கில் அதைக் குதறி விடுவார்கள். எனக்கும் இதே கதிதான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இதில் நான் நடித்த எல்லாக் காட்சிகளும் அப்படியே இருந்தன. படம் மொத்தத்தையும் விறுவிறுப்பாகவும் எடிட்டிங் செய்திருந்தார் புவன் சீனிவாஸ்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ‘பீமா’வுக்குப் பிறகு எனது நெருங்கிய நண்பராகிவிட்டார். பிரச்சினையான பல காலகட்டங்களில் எனக்கு உதவியாக, ஊக்கமாக இருந்திருக்கிறார். இந்தப் படத்தின்போது எனக்காக என் சௌகரியத்துக்காக லைட்டிங்கைகூட மாற்றி வைத்து உதவி செய்தார். அவருக்கும் எனது நன்றிகள்..” என்றார்.