31 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. இப்படத்தில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார்.
இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்…’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இந்த பாடலை சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்தப் பாடலில் சந்தானத்துடன் நடனம் ஆடிய நடிகை அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டார். அப்பாடலில் அவர் நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை நேற்றைக்கு ஒரு வீடியோ பேட்டியில் கூறியுள்ளார் ‘இசைஞானி‘ இளையராஜா.
“இப்பாடலுக்கான மெட்டை கவிஞர் வாலியுடம் கூறிய போது, “இது என்னயா மெட்டு..? இதற்கு எப்படி பாடல் எழுதுவது..?” எனக் கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூஊம் மழை’ என்ற குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இந்த மெட்டுக்குரிய பாடலை எழுதிவிட்டார்…” எனக் கூறினேன். அதைப் பாடியும் காட்டினேன். உடனேயே வாலி அண்ணன் அதற்கேற்றாற்போல் எழுதியதுதான் இந்த “வைச்சாலும் வைக்காமல் போனாலும்” என்ற பாடல்..” என்று விளக்கினார் இளையராஜா.
இளையராஜா இந்த பாடல் குறித்து பேசிய வீடியோவும் தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.