சினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப்படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பரத் மோகன் இயக்கியிருக்கும் ‘IGLOO’ அந்த வகையான ஒரு படம்தான். இதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது.
படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் அம்ஜத்கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும், மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.
அரோல் கொரேலி தனது இனிமையான இசைப் பதிவுக்காக புகழ் பெற்றவர். இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குநராகவும், ஜி.கே.பிரசன்னா படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான பரத் மோகன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் பரத் மோகன் இத்திரைப்படத்தைப் பற்றிக் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச் சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் அந்த மருந்துகளைவிட நம்மிடையே இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் நமக்குள் இருக்கும் ‘நேர்மறை’யான சிந்தனைகள்தான்.
எமோஷனல் காதல் கதையான இந்தப் படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம் இது. இதைக் கேட்டுவிட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில்தான் காண வேண்டும்.
நாங்கள் இந்த படத்தை மிக யதார்த்தமாக காட்ட விரும்பினோம். வழக்கமான சினிமாத்தனமான மிகைப்படுத்தல்களை படத்தில் முற்றிலும் தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவைதான்.
அனைத்து கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், எங்களுக்கு இதுவொரு சிறப்பான அனுபவமாக அமைந்தது.
நல்லதொரு கருத்தை இந்த தருணங்கள் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டு மொத்தக் குழுவும் நம்புகிறோம்..” என்றார்.