full screen background image

“தி.மு.க. மேயரை அழைத்திருந்தால் கரு.பழனியப்பன் வந்திருப்பார்” – சீனு ராமசாமியின் கிண்டல்..!

“தி.மு.க. மேயரை அழைத்திருந்தால் கரு.பழனியப்பன் வந்திருப்பார்” – சீனு ராமசாமியின் கிண்டல்..!

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் முதன்முதலாக இயக்கியுள்ள படம் கள்ளன்’. இப்படத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் விநியோகஸ்தர் குமரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராஜூ முருகன், இசையமைப்பாளர் கே, நடிகை மாயா, நமோ நாராயணன், பத்திரிகையாளர் ஜெயராணி, எழுத்தாளர் தமயந்தி, நடிகர் ஆரி அர்ஜுனன் உட்பட பல திரைப் பிரபலங்கள், பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில், இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “ஒரு நாள் டெல்லியில் ஒரு பயணத்தில் தயாரிப்பாளர் மதியழகனை சந்தித்தேன். அப்போது அவர் “சந்திரா ஒரு அருமையான கதையைச் சொன்னார். அதை தயாரிக்கலாம் என்று நினைத்துள்ளேன்..” என்றார். உடனே சந்திரா எழுதிய அந்தச் சிறுகதையின் தரத்தை சொல்லி “முதலில் அந்தப் படத்தை கமிட் செய்யுங்கள்…” என்றேன்.

இந்தப் படத்தின் விஷுவல்கள் ரத்தமும், சதையுமாக புதிதாக இருக்கிறது.  இது போன்ற பிராந்திய வாழ்வை முன் வைக்கிற படைப்புகளுக்கு நிச்சயமாக ஆயுள் அதிகம். ஒரு பெண் எழுத்தாளர், இயக்குநராவதை நாம் ஆதரிக்க வேண்டும்.

கரு பழனியப்பன் இங்கு வந்திருக்க வேண்டும். நன்றாகத்தான் நடித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து ஒரு அமைச்சரை அழைத்திருந்தால் கரு.பழனியப்பன் இங்கே வந்திருப்பார். ஒரு நியாயமான மனிதர், கோபத்தால் வரவில்லை என்பது சரியில்லை. அவர்தான் முன்னின்று இந்தப் படத்தை தூக்கியிருக்க வேண்டும்.

பெரிய படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை,  பீஸ்ட்’ படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில், அது பெரிய ஹீரோ நடித்த படம். ஆனால் இந்தக் கள்ளன்’ வெற்றி பெறுவதில்தான் ஒரு நாகரீகம் இருப்பதாக நான் கருதுகிறேன். கள்ளன்’ வெளியாகும் நாள்தான் பொன்னான நாள். ‘கள்ளன்’ படம் சிறப்பான வெற்றியை பெற வேண்டும்…” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்தக் கள்ளன்’ வெளிவரவுள்ளது, இந்தப் படம் இவ்வளவு நிறைவாக உருவானதற்கு என் குழுவினர்தான் காரணம், அனைவருக்கும் நன்றி.

சந்திரா மேடம் பரபரப்பான, நேர்மையான மனிதர். அவரது நேர்மையால் அவருக்கு நிறைய கோபம் வரும். ஆனால், படத்தை நன்றாக எடுத்துள்ளார். நீண்ட நாட்கள் படம் எடுத்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு எழுத்தாளரை இயக்குநராக மாற்றியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் 4 லட்சம் ரூபாய்க்கு விற்றது, அதனை நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு அளிப்பதில் பெருமையடைகிறேன்..” என்றார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசும்போது, “இந்தப் பட விழாவுக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் சந்திராதான். இங்கு இந்தப் படத்தை குறிப்பிடும்போது, விடுதலை என்றார்கள். யாருக்கு, எதிலிருந்து விடுதலை என்பதுதான் இங்கே முக்கியம்.

என்னை சினிமாவுக்கு என் இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது சந்திராதான். அவரின் கோபம் குறித்து எனக்கு நிறைய தெரியும். கிராமத்திலிருந்து வந்து, எதிலும் புரட்சியை புதுமையை தேடும் நபர். ஆண் மட்டும்தான் கமர்ஷியல் படம் எடுக்க முடியுமா என சொல்லி அழுத்தமான கதையை தான் நினைத்ததை எடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் அல்லது நான்தான் நடித்திருக்க வேண்டியது. கரு பழனியப்பன் வரவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். சந்திரா அவர்களின் பல வருட போராட்டம். ஒரு பெண்ணின் பார்வைக்கு மரியாதை தந்த தயாரிப்பாளர் மதியழகனுக்கு வாழ்த்துக்கள்.. எல்லோரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.

இயக்குநர் சந்திரா தங்கராஜ் பேசும்போது, “என்னுடைய தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. இவருக்கு முன்னால் நூறு பேருக்கு கதை சொல்லியுள்ளேன். எல்லோரும் “நீங்கள் எப்படி இந்தப் படத்தை இயக்கம் செய்வீர்கள்..?” என்று மறுத்து விட்டார்கள்.

ஆனால் மதியழகன் சார் கதை கேட்ட மாலையிலேயே “இந்தப் படத்தை நாம் செய்யலாம்…” என சொல்லிவிட்டார்.

இத்தனை காலமும் என் நண்பர்கள்தான் எனக்கு துணையிருந்தனர். ராஜு முருகன் எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார். ஆரியும், நானும் நிறைய சண்டை போட்டுள்ளோம். இந்தப் படத்தில் ஆரிதான் நடிக்க வேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் அந்த நேரத்தில் அவரது நெடுஞ்சாலை படம் வேலைகள் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.

படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நமோ நாராயணா ஒன் டேக் ஆர்டிஸ்ட். படத் தொகுப்பாளரை மிகவும் தொந்தரவு செய்துள்ளேன். இசையமைப்பாளர் கே’-விடம் மட்டும்தான் நான் கோப்படவில்லை.  அவர் இந்தப் படத்திற்கு வருட கணக்காக இசையமைப்பாளர் வேலை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு முயற்சியாக இந்த படத்தின் இசை இருக்கும்.

கரு.பழனியப்பன்தான் இந்த படத்தை முதல் பிரதி கணக்கில் தயாரித்தார். படத்தின் நடிகர்கள் அனைவரும் அசிஸ்டண்ட் டைரக்டர் போல் வேலை பார்த்தனர். குறைந்த செலவில்தான் படத்தை எடுத்து முடித்தோம். சாதாரண நிர்வாக சிக்கல்கள்தான் ஏற்பட்டது. எனக்கும் கரு.பழனியப்பனுக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு விரைவில் மறைந்து விடும். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம்.

இந்தப் படம் இவ்வளவு நாட்கள் ஆனது விதி போல் உள்ளது. இது எல்லாம்தான் என் கோபம். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எனக்குள் இருந்தது. என் திரைப்பட நிகழ்ச்சிக்குத்தான் வருவேன். அதுவரை எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன் என என் மகள் கூறினாள். இந்தப் படம் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக இருக்கும்…” என்றார்.

நடிகர் நமோ நாரயணன் பேசும்போது, “கள்ளன் படம் நிறைய போராட்டத்தை தாண்டி வந்துள்ளது என்றார்கள். கொரோனாவையே தாண்டி வந்துள்ளோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி தான் வரவேண்டும்.

சந்திரா மேடம் எல்லாவற்றையும் தாண்டி அற்புதமான படத்தை எடுத்துள்ளார் அவருக்கு தூணாக சுந்தர் சார் பின்னால் இருந்துள்ளார். கரு.பழனியப்பனும் நானும் நண்பர்கள். அவருடன் இந்தப் படத்தில் நடித்தது சந்தோசம்.

இது ஒரு பீரியட் படம் என்பதால் தாமதமான உணர்வை தராது. இந்தப் படம் வருவதற்கு இதுவே சரியான தருணம் என நான் நினைக்கிறேன். அனைவரும் இந்தப் படத்தில் நன்றாக உழைத்துள்ளார்கள், இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “ஒரு சின்ன படத்திற்கும், பெரிய படத்திற்கும் ஒரே ஒரு ஷோதான் வித்தியாசம், அந்த இடைவேளையில் சின்ன படம் பெரிய படமாகிவிடும். பெரிய படம் சின்ன படமாகிவிடும். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய படமாக மாறும்.

சந்திரா மேடத்தை பத்திரிக்கையில் வேலை பார்த்த நாள் முதல் தெரியும். அவரின் சினிமா கனவும், அவரது போராட்டமும் எனக்கு தெரியும். அவர் படத்தில் “பாடல் எழுத வாய்ப்பு தாருங்கள்…” என்று கேட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். சந்திராவின் கோபம் ஒரு அர்த்தமுள்ள படைப்பாக மாறியுள்ளது. மிக வித்தியாசமான ஒரு படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார். அவர் ஒரு காதல் படம் எடுப்பார் என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் எழுதியிருக்கும் திரைக்கதையே என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

பெண்களால் முடியாது எனும் பொது புத்தி இன்னும் மாறவில்லை. அதை இந்தப் படம் மாற்றும் என்று நான் நம்புகிறேன். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும்…” என்றார்.

Our Score