full screen background image

“மீண்டும் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கப் போகிறேன்” – நடிகர் ஆர்.கே. அதிரடி அறிவிப்பு..!

“மீண்டும் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கப் போகிறேன்” – நடிகர் ஆர்.கே. அதிரடி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்.கே.

‘எல்லாம் அவன் செயல்’ என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல; அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்.கே.

தொடர்ந்து ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகர் ஆர்.கே.

ஆர்.கே.வுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. வழக்கமான ஒரு பிசினஸ்மேனக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க புதுவிதமான கண்டு பிடிப்புகளை பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே கண்டுபிடித்து பல்வேறு தர சோதனைகளுக்கு பிறகு அவற்றை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டு பிடிப்பாளராகவும் வலம் வருகிறார் ஆர்.கே.

ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் அதற்காக இவருக்கு கிடைத்த அங்கீகாரமும் பெரும்பாலும் வெளியே தெரியவே இல்லை. அவரும் அதை பறைசாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு புதிய தீர்வாக இவர் கண்டுபிடித்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.

குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக் கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்.கே.வுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ’ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற இந்த தயாரிப்பை கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச் செய்து இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஆர்.கே.

உலக நாடுகள் இவரது கண்டுபிடிப்பை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கிய சமயத்தில், கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒரே இடத்தில் 1005 பேரை இந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பு’வை பயன்படுத்த செய்து மிகப் பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி இதன் தரத்தை நிரூபித்தார் ஆர்.கே.

தற்போது அதற்கான அங்கிகாரம்தான் இவருக்கு அடுத்து அடுத்து கிடைத்து வருகிறது. குறிப்பாக இதற்காக இந்திய அரசிடமிருந்து இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஆர்.கே.

இந்த நிலையில் சினிமாவைவிட்டு ஆர்.கே. சற்றே ஒதுங்கிவிட்டாரோ என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும். ஆனால் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்கே அந்த சந்தேகத்திற்கு. முற்றுப்புள்ளி வைத்தார்.

“எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்து கொண்டேதான் இருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்

ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப் போவதில்லை. என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில்தான் வெளியாகும். திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான். ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்.-2’ படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில்தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

தலைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு மட்டுமல்ல இன்றைக்கு உலகத்தில் இன்னொரு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டை பிரச்சினைக்கும் இவர் மருந்து கண்டுபிடித்துள்ளார்.

இதற்காக தான் கண்டுபிடித்துள்ள தயாரிப்பை கடந்த மூன்று வருடங்களாக மக்களிடத்தில் பயன்பாட்டிற்காக விட்டுள்ளார் ஆர்.கே. எப்படி தனது வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ இந்திய அரசின் காப்புரிமை கிடைத்ததோ அதேபோல இந்தக் குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக தான் கண்டுபிடித்த இந்த தயாரிப்புக்கும் காப்புரிமை கிடைக்கும் என உறுதியாக கூறுகிறார் ஆர்.கே.

தன்னுடைய இந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை விளம்பரப்படுத்துவதற்காக சினிமா பாணியில் இந்தியாவில் உள்ள ரயில் இன்ஜின்களில் வண்ண விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார் ஆர்.கே. இப்படி மொத்தம் 50 ரயில் இன்ஜின்களில் இந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை விளம்பரப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார் ஆர்.கே.

இத்துடன். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏழை மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் நடிகர் ஆர்.கே.

“ஒரு பக்கம் வியாபாரம், இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் இதன் மூலமாக கிடைக்கும் தனது வருமானத்தில் 25 சதவீதத்தை ஏழை மக்களின் நலனுக்காக செலவழிக்கிறேன்..” என்கிறார் ஆர்.கே.

Our Score