தயாரிப்பாளர் பி.ஜி.எஸ்.சரவணகுமார் தயாரிப்பில், இயக்குநர் சிவ மாதவ்வின் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’.
உலக கின்னஸ் சாதனை படைக்கும்விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.
24 கேமராக்கள் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75-க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – சிவ மாதவ், ஒளிப்பதிவு – மாரீஸ்வரன், இசை – கார்த்திக் ஹர்ஷா, படத் தொகுப்பு – ஸ்ரீநாத், தயாரிப்பு – பி.ஜி.எஸ். சரவணகுமார். இணை தயாரிப்பு – கேப்டன் எம்.பி.ஆனந்த்.
பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக் குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனும், இயக்குநருமான கே.பாக்யராஜ் பேசும்போது, “நான் ஹீரோவாக நடித்து 21 வருஷம் ஆச்சு என்று திரும்பத் திரும்பச் சொல்லி என்னை சங்கடப்படுத்திவிட்டார்கள்.
படத்தில் ஸ்கீரினில் வர்றவன்தான் ஹீரோ என்றால் கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா..? அது இருந்தால்தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் எப்போதுமே ஹீரோதான்.
இங்கு இயக்குநர் “என்னைப் படைத்த அப்பா அம்மாவுக்கு…” என ஆரம்பித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவனாக நடித்ததே இல்லை. இந்தப் படத்தில்தான்தான் முதல்முறையாக செய்திருக்கிறேன்.
இப்படம் ‘சயின்ஸ் பிக்சன்’ சார்ந்தது என்றார்கள். இவர்கள் திட்டமிட்டதையெல்லாம் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. மொத்தப் படமும் 81 நிமிடங்கள்தான் என்றாலும் 3 நாட்கள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமும் எங்களுக்கு இருந்தது.
ஆனால், முன் தயாரிப்பிலேயே இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். படத்தில் நான் வசனத்தை மறந்து விடுவேன் என நினைத்து ‘பிளாக் பாண்டி’ எனக்கு அவ்வப்போது டயலாக்கை ஞாபகப்படுத்தி உதவி செய்தார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.