தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமைமிக்க இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக் களங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனி மதிப்பும் இருக்கிறது.
‘ஓ மை கடவுளே’, ‘மன்மத லீலை’ என வெற்றிப் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார் அசோக் செல்வன்.
இச்சந்திப்பில் பத்திரிகை நண்பர்களிடம் அசோக் செல்வன் பேசும்போது, “நான் எந்தவொரு சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வருகிறார்கள். அதை இங்கே சொல்லிக் காட்ட விரும்பவில்லை.
ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும், அன்பும் மிகப் பெரியது. உங்களது விமர்சனங்களும், கருத்துக்களும்தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள்தான். உங்கள் கருத்துக்களின்படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும். அதுவே என் விருப்பம்.
எனது ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் நான் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் மூன்று கதாப்பாத்திரங்கள் என்று நினைத்துதான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.
கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம். விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம், என் குணத்திற்கு செட் ஆகாது.
அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்…” என்றார்.