full screen background image

“மிஸ்டர் லோக்கல்’ படத்தினால் எனக்குத்தான் 20 கோடி நஷ்டம்” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு..!

“மிஸ்டர் லோக்கல்’ படத்தினால் எனக்குத்தான் 20 கோடி நஷ்டம்” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு..!

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் நேற்றைக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

ஆனால், அப்போதைய காலக்கட்டத்தில் இந்தப் படத்தைத் துவங்க முடியாத சூழல் இருந்தது. இதனால் மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக…” தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ்தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்தப் படத்தினால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை  வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தைத் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் தன்னை சிக்க வைத்துவிட வேண்டாம் என  சிவகார்த்திகேயன்  கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து  தற்போது  நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்  செய்துள்ள இந்த மனுவை  அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார்.

ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன்  பதில் மனு தாக்கல் செய்த இந்த  வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளி வைத்துள்ளார்.

Our Score