சர்வானந்த், அமலா, ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் ‘கணம்’.
இந்தக் ‘கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பேசும்போது, “என்னுடைய இளமை காலத்தில் என்னை ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்துருக்கிறேன்.
இப்படம் எனக்கு மிக மிக சிறப்பான படம். ஒரு படத்தைப் பற்றி சாதாரணமாக யாரும் இவ்வளவு பேச மாட்டார்கள். எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும்.
உங்களை சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம் இது. ஆழமான அன்பை, உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீகார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும்.
இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் பெருமையடைகிறேன். இந்தக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்காக இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கிற்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப் படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
எஸ். ஆர்.பிரபு, சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர். சினிமா துறையில் இருக்கும் இளம் கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். உங்களுடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நான் எந்தப் படம் பார்த்தாலும் பார்வையாளராகத்தான் பார்ப்பேன். அதேபோல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி, இப்படத்தை ஒரு பார்வையாளராக பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்…” என்றார்.