full screen background image

“விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..!

“விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..!

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது விருமன்’ திரைப்படம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவரை அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார்.

வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா ஆகியோரின் குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள்.

கலைராணி, “இந்தப் படத்தில் அதிதி ஷங்கருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தது நான்தான்..” என்றார்.

இந்திரஜா பேசும்போது, “சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

பிறகு, நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க நடிகர் கார்த்தியும், நடிகை அதிதி ஷங்கரும் அவரவர் குழுவிற்கு தலைமை ஏற்றார்கள். கார்த்தி ராஜ்குமார், செல்வா, முத்தையா, மனோஜ், ஷ்ரவன் மற்றும் ராஜா ஆகியோர்களை தனது குழுவில் இணைத்துக் கொண்டார்.

அதிதி, இந்திரஜா, சாண்டி, பாலா, ரிஷி, பாண்டி ஆகியோர்களை தனது குழுவில் இணைத்துக் கொண்டார். இறுதியில், அதிதி குழு வெற்றி பெற்றார்கள்.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல; சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத் தன்மை வேண்டும். நம்மைவிட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை இந்த விருமன்’ படம் மூலமாக தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறோம்.

பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது “எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது…” என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கிராமத்தில்தான் நன்றாக போகும். நகரத்தில் ஓரளவுக்குத்தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த இரண்டு வருட கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலேயே உட்கார்ந்து ஓடிடி-யில் கொரியன் படமாகப் பார்த்து பழகி இருப்பார்கள். தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்ப மாட்டார்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நம் மக்கள் மாறிவிட்டார்களா? என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அப்படியெல்லாம் யாரும் மாறவில்லை. நம் பண்பாடு, கலாச்சாரம் என்றுமே மாறப் போவதில்லை என்பதற்கு இந்த விருமன்’ படத்தின் வெற்றி எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்தக் கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களில் தியாகத்தால்தான் நாங்கள் வெளியில் சென்று உழைக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா..? வாய்ப்பே இல்லையா..? ஆகையால், ஒரே நாளில் அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அம்மாவை அழைத்து வந்துருக்கிறோம் என்று கூறினார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை நாள் அவர்களை வெளியே அழைத்து சென்றிருப்போம்..? சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்..? ஆகையால்தான் இந்தப் படத்தில் அதிதியை ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்.

பெண்கள் அசதியாக இருக்கிறது. ஹோட்டலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கேட்பது சோம்பேறித்தனம் கிடையாது. தினமும் சமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்காவது சமைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்.

அந்த வகையில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், சந்தோசமாக இருக்கவும்தான் இந்த விழாவை திட்டமிட்டோம். இப்போது சந்தோசமாக இருக்கிறது. இதுபோல் விளையாடி பல நாட்கள் ஆகிறது. அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சிதான்.

பட குழுவினரும், பத்திரிகை நண்பர்களும் ஒன்று திரண்டு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் கண்டிப்பாக உணவருந்தி விட்டு செல்லுங்கள். இந்த விழாவை சிறப்பாக உருவாக்கி கொடுத்த ராஜாவுக்கு நன்றி…” என்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் “தம்பி நல்லபடியா செய்வோம்” என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுது கொண்டே சொல்வார்.

இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். இதற்காக ராஜாவிற்கு நன்றி.

பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு. இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல்…” என்றார்.

படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பேசும்போது, “எல்லாப் படங்களும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சில படங்கள்தான் வெற்றியின் உச்சத்திற்கு போய் நிற்கும். அப்படி ஒரு படம்தான் விருமன்.

பி அண்டு சி-யில்தான் பெரிய கூட்டமாக வருவார்கள் என்று நினைத்தோம். முதல் முறையாக லூக்ஸ்-இல் 24 காட்சிகள் போட்டிருந்தார்கள். மல்டிபிளக்ஸ்-இல் 24 காட்சிகளை போடுகிறார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.

வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமைவரை 90 சதவீத டிக்கெட்டுகள் முன் பதிவாகி இருந்தது. பி அண்டு சி மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாடே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று அப்போதே ராஜா அண்ணனிடம் கூறினேன்.

நிறைய படங்களின் வெற்றியே நிறைய பேர்களுடைய உழைப்பால்தான் இருக்கும். உழைப்பாகட்டும்.. இந்த படத்தின் திட்டமாகட்டும்… அதைத் தாண்டிய அன்பு 2D சூர்யா அண்ணன், ராஜசேகர் அண்ணன், கார்த்தி சார், சிவகுமார் ஐயா குடும்பத்தினர் உடைய மனசுக்கு ஒரு வெற்றி இருக்குமல்லவா..? அந்த வெற்றியாகத்தான் இந்த விருமனின் வெற்றியைப் பார்க்கிறேன்.

3 மடங்கு அன்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அதே ஊரை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் படம் பார்த்துவிட்டு, பெரியண்ணா இந்த கதாபாத்திரம், சின்ன அண்ணன் இந்த கதாபாத்திரம், அப்பா இந்த கதாபாத்திரம் என்று கூறி ஒட்டு மொத்தமாக பேசியதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த 4 நாட்களில் 35 கோடியை தாண்டி வசூல் ஆகி இருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; மிகப் பெரிய வெற்றி! எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு இதைவிட சரியான தருணமோ, சரியான நபர்களோ இல்லை என்று நினைக்கிறேன்…” என்றார்.

நடிகர் சூர்யா பேசும்போது, “கொரோனா காலகட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கடுமையான சூழலிலும் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்த நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஏற்கனவே நன்றி தெரிவித்துவிட்டோம். அவர்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளோம்.

ஆனால், கேமேராவுக்கு பின்பு வேலை பார்த்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தயாரிப்புப் பணிகளை செய்த ராஜாவுக்கு நன்றி. இப்படம் உருவாகுவதற்கு இயக்குநர் முத்தையா எப்படியோ, அதே போல்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் வெளியாகும்வரை இருந்த ராஜாவும் முக்கிய காரணம். ராஜா மூலமாகத்தான் இந்த வெற்றியை இன்று அடைய முடிந்தது.

மனோஜ், செந்தில் சார், விஜய், மஹாதேவன், நந்து, கார்த்தி, குணா, சத்யா என இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. எந்தவித தங்கு தடையுமின்றி விருமன்’ வெற்றிக்கு இவர்கள்தான் முக்கிய காரணம். இதற்காகவே இங்கு அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டேன். அதை ராஜா மிகவும் அழகாக நடத்திக் காட்டியுள்ளார்.

கார்த்தி சொன்ன வார்த்தைகள் உண்மையானதுதான். தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது. குடும்பங்களின் தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும்தான் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்யக் காரணமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

எங்களுக்கு பின் மிக பெரும் பலம் உள்ளது. எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள்தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும்.

ஒரு ஆண் ஜெயிப்பது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின் தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே இருக்கலாம், தியாகம் என்ற சொல்லுக்குள் பல வார்த்தைகள் உள்ளது.

என் தங்கை பிருந்தா மற்றும் செல்வி சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. “எங்களுக்கு சொர்க்கம் என்றால், நாங்கள் சாப்பிட்ட தட்டை வேறு ஒருவர் கழுவுவதுதான்…” என்றார். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

Our Score