இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் தனது முதல் மனைவியை சட்டப்படி பிரிந்த நிலையில், கடந்த வாரம் மறுமணமும் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மறுமணம் குறித்து நேற்றைய இரவில் மனம் திறந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இமான்.
இந்தப் பதிவில், “கடந்த ஞாயிற்றுக்கிறமை, மறைந்த பிரபல கலை இயக்குநரான உபால்டு அவர்களின் மகள் அமலியை நான் மறுமணம் செய்துள்ளேன்.
இத்திருமணம், முழுக்க, முழுக்க எனது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம்தான். கடந்த சில வருடங்களாக, எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் இந்த திருமண ஏற்பாடு முக்கிய தீர்வாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில், இத்திருமணத்தை ஏற்பாடு செய்து, அமலியை எனக்கு அறிமுகப்படுத்திய என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
எனது வாழ்வின் கடினமான தருணங்களிலும் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்த எனது தந்தை கிருபாகரதாஸ் அவர்களுக்கு, நான் எப்போதும் கடன்பட்டுள்ளேன்.

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவில்லாத மகிழ்ச்சியை எனக்கு தந்துள்ளது.
எனது இத்திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. அவர்களை இத்தருணத்தில் பெரிதும் மிஸ் செய்கிறேன். அவர்கள் என்னிடம் விரைவில் வந்து சேர்வதற்காக நான் மிகவும், பொறுமையுடன் காத்திருக்கிறேன்.

அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் என அனைவரும் எங்கள் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம்.
அமலியின் மிகப் பெரிய குடும்பத்தினர் என் மீது காட்டிய அளப்பறியா அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இத்தருணத்தில், எனக்கு ஆதரவுடன் இருக்கும் எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கவும் விரும்புகிறேன்…” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமானின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.