full screen background image

மணிரத்னத்தின் ‘பகல் நிலவு’ படம் உருவானது எப்படி..?

மணிரத்னத்தின் ‘பகல் நிலவு’ படம் உருவானது எப்படி..?

இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன் சமீபத்தில் ‘தள்ளிப் போகாதே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் ஜெகன், “மணிரத்னம் உங்களிடம் ‘பகல் நிலவு’ படத்தின் கதையை சொன்ன சம்பவத்தை இப்போது பகிர்ந்து கொள்ளுங்களேன்..” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தான் பேசும்போது மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கிய ‘பகல் நிலவு’ படம் உருவானது எப்படி என்பதைத் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் இது குறித்துப் பேசும்போது, “நானும், மணிரத்னமும் சின்ன வயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நிறையக் கதைகள் பேசியிருக்கிறோம். இருவருக்குமே சினிமா மீது அவ்வளவு ஆர்வம். அப்போது ஒரு நாள் மணிரத்னம் என்னிடம் ஒரு கதை இருக்கிறது.. நம்ம பண்ணலாம் என்று கேட்டார். ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னடப் படமொன்றை மணிரத்னம் இயக்கியிருந்தார். அதைத் தயாரித்தவர் எனது அப்பா. அந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு மணிரத்னத்தின் மேக்கிங் ரொம்ப பிடித்திருந்தது.

ஆகையால் மணிரத்னம் படத்தை ஒப்புக் கொண்டு தயாரித்தோம். அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியில்லை என்றாலும் நன்றாக ஓடியது. அந்தப் படத்தின் மூலம் மணிரத்னத்துக்குப் பெரிய பெயர் வந்தது. அதில் எனக்குப் பெருமை.

ரஜினி சார் ஒரு நாள் என்னிடம் “அந்தப் படத்தின் இயக்குநரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். நான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்…” என்றார். நானும் ஏவி.எம். பிரிவியூ தியேட்டரில் அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினேன். அதனைத் தொடர்ந்து மணிரத்னத்தைப் புகழ்ந்து பேசினார் ரஜினி சார்.

அதற்குப் பிறகு மணிரத்னம் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார். அது எனக்குப் பெருமையான விஷயம். இன்றைக்கும் நானும் மணிரத்னமும் நண்பர்களாக இருக்கிறோம்..” என்றார்.

 
Our Score