எந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களைகூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.
ஆனால், 2019-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம், ரசிகர்கள் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
இந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.
இந்த ‘ஹீரோ’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பை கையாள்கிறார்.
‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே.ராஜேஷ் இது பற்றிக் கூறும்போது, “போஸ்டர்களும், காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது உண்மைதான்.
ஆனால் ‘ஹீரோ’ படத்தைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக் குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது.
‘ஹீரோ’வின் ஹீரோவான சிவகார்த்திகேயன் ஒரு பெரிய பிராண்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்க வைத்து கொண்டிருக்கிறார்.
‘ஹீரோ’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளுடன் இந்த படத்தில் இணைந்திருக்கிறேன். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை கொண்டிருப்பது ஒரு பெரிய வரம்.
ஒரு திரைப்படத்தை ஆடம்பரமாக தயாரிக்க முடியும். ஆனால் அத்தகைய நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவதுதான் மிகப் பெரிய விஷயம். நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாக தெரிந்தாலும், தொழில் நுட்பக் குழுவினர் இந்த படத்தின் மற்றொரு தூணாகும்.
‘இரும்புத் திரை’யில் பி.எஸ்.மித்ரனின் இணையற்ற கதை சொல்லல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் ‘இரும்புத் திரை’ போன்ற ஒரு கதையுடன்தான் வரக் கூடும் என்று நான் கருதினேன்.
ஆனால் அவரோ ஆச்சரியமாக ‘ஹீரோ’ என்ற முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையைச் சொன்னார். அவர் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் பிரமிக்க வைத்தது. அந்தக் கதாபாத்திரங்களில் மிகச் சிறந்த நடிகர்கள் நடிப்பது எனக்கு படத்தை இப்போதே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மேலும் இந்த ‘ஹீரோ’ படம் மூலமாக அவர் தனக்கான ஒரு இடத்தை தமிழ்ச் சினிமாவில் பிடிக்கவும் பெரிய வாய்ப்பு உள்ளது..” என்றார்.
இந்த ‘ஹீரோ’ திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “மிகச் சிறந்த நடிகர்கள் பட்டாளத்தையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை, நாங்கள் நினைத்ததுபோல் உருவாக்க சரியான கால அவகாசம் தேவை.
இந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன்.
எனவே, எங்களுடைய ‘ஹீரோ’ திரைப்படம் நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்…” என்றார்.