ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி’. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ராஜு முருகன்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் தொகுப்பாளரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
அத்துடன் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கீ’, ‘கொரில்லா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.