full screen background image

“சந்தானத்தால்தான் நான் ஹீரோவானேன்..” – நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு..!

“சந்தானத்தால்தான் நான் ஹீரோவானேன்..” – நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு..!

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜ் நாராயணனின் தயாரிப்பில், ’மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் குலு குலு’.

இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர்  மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும்  பெற்றுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் வரும் ஜூலை 29-ம் தேதியன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி படக் குழுவினர், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.கலை இயக்குநர் ஜாக்கி பேசும்போது, “இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிரிப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்..” என்றார்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படமாகிவிட்டது. இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட இருக்கும் உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் எனது இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருக்கும். இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.“  என்றார்.

இயக்குனர் ரத்னகுமார் பேசும்போது, “நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார்தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம். சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார்.

இந்தப் படத்திற்காக இயக்குநர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள் எனக்கு உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப் படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ்  செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது.

இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமான படம். கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன்தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கின்றன. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குநர் ஜாக்கிதான். படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்திற்குள் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அனைவரும்தான் காரணம்…” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்தக் கதையை ரத்னகுமார் என்னிடம் சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும்.

சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள்தான் எல்லா இடத்திலும் கேட்கிறது.

இந்த படத்தில் ரத்னகுமார் தனது கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னகுமாரின் நட்பினால் ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழுவின் முழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்தப் படத்தை வெளியிட அவர் எங்களுக்கு பெரும் உதவியாய் இருந்தார்.…” என்றார். 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. நண்பனாக..! எப்போதும் என் நண்பேண்டா’ என்றால் அது சந்தானம். அவரால்தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் ரத்னகுமார் இயக்கியிருக்கிறார் என்பதால் படம் பார்க்காமலேயே, இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்தப் படத்தில் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளர் மூவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும்…” என்றார்.

Our Score