full screen background image

பாலகிருஷ்ணாவின் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ தமிழுக்கு வருகிறது..!

பாலகிருஷ்ணாவின் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ தமிழுக்கு வருகிறது..!

இன்றைய சினிமா ரசிகர்களின் ரசனையும் பார்வையும் வேறு மாதிரி மாறி விட்டது. அறிவியல் முன்னேற்றங்களை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ளும் அவர்களே பழைய சரித்திரக் கதைகளை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் தலை மேல் வைத்து கொண்டாடி விடுவார்கள். அதற்கு உதாரணம் பாகுபலி-1 பாகுபலி-2 படங்களின் வசூல் சாதனை.

கூட்டு குடும்ப வாழ்க்கையின் சிதைவுதான் சரித்திர கதைகளை கேட்டிராத இந்த தலைமுறையினருக்கு இது மாதிரியான படங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆர்வத்தினை பூர்த்தி செய்வது மாதிரியான இன்னொரு படம்தான் ‘கெளதமி  புத்ர சாதகர்ணி.’

ஆந்திராவில் சென்ற ஆண்டு வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணாவின் 100-வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது.

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி. சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர், இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.

ஒளிப்பதிவு – சரஸ்வதி புத்ர ஞானசேகர், இசை – பாரதி புத்ர சிரஞ்சன், நடனம் – பாரதி புத்ரி பிருந்தா, சுசிலா புத்ரி ஸ்வர்ணா, சண்டை பயிற்சி – மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண், பாடல்கள் – வைரமுத்து, தனக்கோடி புத்ர மருதபரணி, வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.

படத்தை இயக்கியிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும், இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குநராவார்.

vlcsnap-2017-03-19-11h21m55s040

சிறு வயது முதலே இந்த வரலாற்று கதையை கேட்டும் படித்தும் இந்த கதையின் மீது ஒரு ஈர்ப்பு கிரிஷ்க்கு ஏற்பட்டிருக்கிறது. வளர்ந்து இயக்குனரான பிறகு தனது மனதுக்குப் பிடித்த வரலாற்று கதானாயகனான ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார்.

இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் இந்த வரலாற்று கதையை படமாக்கவும் நடிக்கவும் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் ஆர்வமாக இருந்தாராம். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபட்டு முதல்வராகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அந்த பாக்ரியம் அவருடைய மகன் பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்து மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. ஆந்திராவில்  100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு  150 கோடியை வசூலித்த படம் இது.

vlcsnap-2017-03-19-11h22m29s329

ராஜமவுலிகூட ஒரு முறை இயக்குநர் கிரிஷ்ஷை சந்தித்தபோது “எப்படி 80 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்தீர்கள்..? அதுவும் இவ்வளவு போர்க்கள சண்டை காட்சிகள். கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினல் மிருகங்களை வைத்து எடுத்திருக்கிறீர்கள்…? ஆச்சர்யம்.. நான் ‘பாகுபலி’யில் நிறைய கிராபிக்ஸ் பயன் படுத்தி இருக்கிறேன்.. நீங்கள் செய்திருக்கிற இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள்…” என்று பாராட்டி இருக்கிறார்.

சரி அப்படி என்ன வரலாற்று சிறப்பு இந்த படத்தில்….?

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 21-ம் நூற்றாண்டில். இந்த கதை நடந்தது முதலாம் நூற்றாண்டில். அப்போதைய வட இந்தியாவில் நஹபாணன், தெற்கே சாதகர்ணி ஆகிய இரு மன்னர்கள் ஆண்டு வந்தனர். இதில் நஹபாணன் கொடுங்கோல் ஆட்சி செய்தவன்.

தனக்கு கீழ் இருந்த குரு நில மன்னர்களின் பிள்ளைகளை எல்லாம் சிறை பிடித்து வைத்துக் கொண்டான். தன் மீது யாரும் படையெடுத்து விடக் கூடாது என்று அந்த குரு நில மன்னர்களை கேடயமாக பயன் படுத்திக் கொண்டான்.

இதனால் கோபமான சாதகர்ணி தனது அம்மாவின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான். தன் தாய் மீதும், தாய்  நாட்டின் மீதும் அதிக மரியாதை கொண்டவன் சாதகர்ணி.

vlcsnap-2017-03-19-11h24m12s672

தன் மகனுடன் போருக்குப் போன சாதகர்ணி, நஹபாணனின் தந்திரங்களையும் நரித்தனத்தையும் முறியடித்ததுடன் பல குறு நில மன்னர்களையும் காப்பாற்றி வெற்றி வீரன் ஆனான்.

சாதகர்ணியின் சிறு வயது ஆசையே பாரத நாடு முழுவதும் ஒரு குடையின் கீழ் அமைய வேண்டும் என்பதுதான். அந்த ஆசையை இந்த வெற்றியின் மூலம் அடைந்தான். அந்த வெற்றியை கொண்டாடிய மக்கள் ‘சாதகர்ணி’ என்கிற அவனது பெயருக்கு முன்னால் அவரது தாயார் ‘கெளதமி’ பெயரை சூட்டி ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ என்று பாராட்டினர். இதன் மூலமாக தாயின் பெயரை இன்ஷியலாகக் கொண்ட முதல் இந்தியன் என்கிற பெருமையையும் பெற்றான் ‘சாதகர்ணி’.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொராக்கோ, ஜார்ஜியா மற்றும் மத்திய பிரதேசத்திலும் நடந்திருக்கிறது.

இவ்வளவு சிறப்பம்சம் உள்ள ஒரு இந்திய வீரனுக்கு கிடைத்த மரியாதையாக தெலுங்கு மக்கள் கொண்டாடி விட்டார்கள். விரைவில் தமிழுக்கு வரும் இந்த இந்திய வீரனை நாமும் கொண்டாடுவோம்.

 

Our Score