full screen background image

“என் சினிமா வாழ்க்கையை அழித்ததே கவுண்டமணிதான்” – நடிகை ஷர்மிலி குற்றச்சாட்டு!

“என் சினிமா வாழ்க்கையை அழித்ததே கவுண்டமணிதான்” – நடிகை ஷர்மிலி குற்றச்சாட்டு!

தன்னுடைய சினிமா வாழ்க்கையை நடிகர் கவுண்டமணி அழித்துவிட்டதாக நடிகை ஷர்மிலி திடீரென்று புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி கிங்’ என்றழைக்கப்படும் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஷர்மிலி. இவர் முதலில் பல தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் பாடல் காட்சிகளில் குரூப் டான்ஸராக நடனமாடியவர். பின்புதான் படங்களில் சோலோ நடிகையாக நடிக்கத் துவங்கினார்.

சமீபத்தில் நடிகை வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷர்மிலி அந்த நேர்காணலில், நடிகர் கவுண்டமணி மீது திடுக்கிடும் புகார்களை அள்ளி வீசியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் பேசும்போது, “நான் குரூப் டான்ஸராகத்தான் என்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினேன். சில காலம் கழித்து ஆட முடியாத சூழல் வந்தபோது நடிக்கத் துவங்கினேன்.

அப்போது ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. எனக்கு காமெடியெல்லாம் வராது. அதுவும் இல்லாமல் அவர் வயசு என்ன..? என் வயசு என்ன..? என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

ஆனாலும் ஒரு படத்தில் கட்டாயப்படுத்தி என்னை நடிக்க வைத்துவிட்டார்கள். அந்தப் படத்தில் எங்களது ஜோடி நல்லா ஒர்க் அவுட் ஆனது. இதன் பிறகு கவுண்டமணிக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 27 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டேன்.

நான் கவுண்டமணியுடன் நடித்ததால்தான் பிரபலமானேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவருடன் சேர்ந்து நடித்ததால் வேறு பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். அதே போல அவரும் எனக்குக் கிடைக்கவிருந்த பல பட வாய்ப்புகளை கெடுத்துவிட்டார்.

வீரா’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக என்னை புக் செய்து இருந்தார்கள். ஆனால் கவுண்டமணி, “அதே தேதியில் நான் தேதி கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லி என்னை அந்தப் படத்தில் நடிக்க விடாமல் செய்துவிட்டார். இதனால், ஒரு கட்டத்தில் கவுண்டமணியிடம் கேட்டுவிட்டுத்தான் நான் மற்ற படங்களில் நடிக்க முடியும் என்ற நிலைமை உருவானது. ஒரு கட்டத்தில் பத்திரிக்கைகளில் ஷர்மிலி கவுண்டமணியுடன் மட்டும்தான் நடிப்பார் என்றெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால், நான் ஒரு நாள் கவுண்டமணியிடம் நேரடியாக “இனிமேல் உங்களுடன் நான் நடிக்க மாட்டேன்…” என்று சொல்லிவிட்டேன். நான் அப்படி சொல்லிவிட்டதால், டென்ஷனாக கவுண்டமணி, அப்போது புக்காகி இருந்த அனைத்து படங்களிலிருந்தும் என்னை தூக்கி விட்டார். இது போன்று பல படங்களில் இருந்தும் என்னை நீக்கி என் திரையுலக வாழ்க்கையைக் கெடுத்து நாசமாக்கியது கவுண்டமணிதான்…” என்று நடிகை ஷர்மிலி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், “ஒரு காலத்தில் திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், 40 வயதுக்கு மேல் நிச்சயம் ஒரு துணை தேவை என்பதை புரிந்து திருமணம் செய்து கொண்டேன். இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். என் கணவர் என்னை அன்பாக கவனித்துக் கொள்கிறோர்..” என்றார்.

Our Score