ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘கொரில்லா ’.
இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவியும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு சிம்பன்சி குரங்கும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கொரில்லா’ படம் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும்போது, “இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன், நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த ‘கொரில்லா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது.
அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் டத்தோ ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ராதாரவி அவர்களின் வழிகாட்டல் படக்குழுவினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்…” என்றார்.