அறிமுக இயக்குநரான கோபி நயினாரின் இயக்கத்தில், ‘கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள திரைப்படம் ‘அறம்.’
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாரிணி நடிகையான நயன்தாரா, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நடித்து வருகிறார்.
இந்த ஒரு காரணத்தாலேயே சினிமா வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கூடுதல் பலமாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் கோபி நயனார், “உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பஞ்சம்தான். இந்தத் தண்ணீர் பஞ்சம்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.
இத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும்போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின் பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும்பொழுது, எங்கள் அனைவரின் எண்ணத்திலும் உதயமானது ஜிப்ரான்தான்.
நிச்சயமாக இசை துறையில் அவர் பெற்றிருக்கும் அங்கீகாரம், எங்களின் ‘அறம்’ திரைப்படம் மூலம் மேலும் வலுப்பெறும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.









