கோடம்பாக்கத்தில் டைட்டிலுக்காக அடித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும் போலிருக்கே..!
ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் ஜீவா தான் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், இயக்குநரையும் மட்டுமே அறிவித்தார். பொதுவாக தயாரிப்பாளர்தான் புதிய படங்களை அறிவிப்பார்கள்.
இதில் ஜீவா வித்தியாசமாக முத்துக்குமார் என்ற புதிய இயக்குநரின் இயக்கத்தில் ‘ஜெமினி கணேசன்’ என்னும் புதிய படத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்று அப்போது சொல்லவில்லை. அது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இதில் நடிகர்கள் கலையரசனும், சூரியும் நடிக்கவிருக்கிறார்கள்.
இதனை தெரிந்து கொண்டுதான் ஜீவா சற்று முந்திக் கொண்டு பெயரையும், இயக்குநரையும் மட்டும் வெளியிட்டுவிட்டார் என்கிறார்கள்.
இருவருமே இந்தப் பெயரை வைப்பதற்கு ஜெமினி கணேசனி்ன் குடும்பத்தினரிடம் முறைப்படி அனுமதி பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்..
கதைக்குப் பொருத்தம் என்றால் வைத்துதான் ஆக வேண்டும். தப்பில்லைதான்.. ஆக.. ரிலீஸ் சமயத்தில் ஒரு கட்டப் பஞ்சாயத்து இருக்குமோ..?