அழகியல் கொண்டது சினிமா. அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர் நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தை தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான G.சிவா.
இந்த வெற்றியை நீங்கள் அடைந்தது எப்படி..?
“ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பதுதான் அர்த்தமானது. யாரும் எடுத்தவுடனேயே உயரத்துக்கு போக முடியாது. ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் R.H.அசோக் ஒளிப்பதிவு செய்த படங்களில் உதவியாளராக பணியாற்றினேன். கே.பி. சார் பெப்சி தலைவராக இருந்தபோது, அவருடன் இணைந்து பெப்சியில் பணியாற்றினேன். மூன்று முறை பெப்சியின் செயலாளராக இருந்தேன்.
சினி கேமிரா அசோசியேசன்ஸிலும் செயலாளராக பணியாற்றினேன். இப்போது தென்னக பெப்சியின் தலைவர் என்ற பொறுப்பு. அத்துடன் பெருமையான விஷயம், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
இது ஐந்து லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு தலைவர் என்கிற பொறுப்பு. ஒரு தமிழன் இந்திய அளவில் போட்டியிட்டு வென்றிருக்கிறான் என்றால் அது எனது வெற்றி இல்லை. தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நினைக்கிறேன். ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்து உரிமை கேட்கும் பொறுப்பு என்னுடையது. நிச்சயமாக அனைத்து பெப்சி தொழிலாளர்களுக்காகவும் நான் கடுமையாக உழைப்பேன்.”
சரி… இப்படியான பொறுப்பு உங்களின் தனிப்பட்ட அடையாளங்களை இழந்து விடாதா…?
“தனம்’ என்ற தரமான படத்தை இயக்கினேன். அடுத்து நான் இயக்கிய ‘குலசேகரனும் கூலிப்படையும்’ என்ற படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. நல்ல இயக்குனர் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். பொறுப்புகள் கூடக் கூடத்தான் தனி மனித அடையாளம் பளீரென தெரியும். சினிமா என்கிற பளபளப்பான துறைகளுக்குள் எவ்வளவோ உணர்ச்சி போராட்டங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வளவையும் சமாளித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.. இதுதான் இப்போதைய என் தலையாய பணி..” என்கிறார் சிவா பெருமிதத்துடன்..!
முயற்சி செய்தால் தமிழன் உலகயே வென்று காட்டுவான் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.. அதில் சிவாவும் ஒருவர்.