டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘எவனவன்.’
இந்தப் படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். மற்றும் அகில் சந்தோஷ் என்ற புதுமுகத்துடன், ‘முருகாற்றுப்படை’ சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – அருண் பிரசாத், இசை – பெடோ பீட், நடனம் – விமல், பாடல்கள் – தென்றல் ராம்குமார், படத் தொகுப்பு – ராமாராவ், சண்டை பயிற்சி – குன்றத்தூர் பாபு, கலை – கே.வி.லோகு, தயாரிப்பு மேற்பார்வை – சாந்தகுமார், தயாரிப்பு – தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ். எழுத்து, இயக்கம் – ஜெ.நட்டிகுமார்.
இயக்குநர் நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர். அத்துடன் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற ‘மெய்ப்பொருள்’ என்ற படத்தையும், ‘பனித்துளி’ படத்தையும் இயக்கியவர்.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் நட்டிகுமார், “எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள்.. இதைச் செய்தால், இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர்.
பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர் உள்ளனர். அதுபோல, சின்ன தவறுதானே செய்கிறோம். இதனால் என்ன பெரிதாக வந்துவிட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்யும் தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்.
வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டு பிடிக்க முடியாத குற்றம் ஒன்றை கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.
‘மெய்ப்பொருள்’, ‘பனித்துளி’ படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் ‘எவனவன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது…” என்றார்.