TN 75 KK கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா.’
இந்தப் படத்தில் கதாநாயகனாக அகில் நடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ இஷாரா நாயர், ‘கமர்கட்டு’ படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரஹீம்பாபு, இசை – சு.வர்ஷன். (இவர் புறம்போக்கு படத்தின் இசையமைப்பாளர்.) படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை – ஜான் பிரிட்டோ, நடனம் – ரமேஷ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், பாடல்கள் – விஜய் சாகர், சக்தி செல்லம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின், தயாரிப்பு – திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள்.
படம் பற்றி இயக்குநர் கெவின் பேசும்போது, “தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள்.
அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் கதாப்பாத்திரம்தான் சஞ்சய்(அகில்). ஊரில் பண்ணையாராக இருக்கும் நேசமணியிடம்(நான் கடவுள் ராஜேந்திரன்) சென்னையில் நடந்ததை சொல்கிறான் சஞ்சய்.
அவனது திறமையையும், அவனது வருத்தத்தையும் புரிந்து கொண்ட நேசமணி நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்றுவிட்டு சென்னைக்கு கிளம்பி வந்து திரைப்படம் தயாரிக்கிறார்.
சினிமா எப்பவும் ஒரே மாதியே இருக்காது. சினிமாவில் இழந்தவர்களும் அதிகம், வாழ்ந்தவர்களும் அதிகம். அப்படிப்பட்ட சினிமாவில் சஞ்சயும், நேசமணியும் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
மாயவரம், கும்பகோணம், சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது…” என்றார் இயக்குநர்.