சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற தமிழ்த் திரைப்படம் சென்ற ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது.
ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது. ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை மிக கச்சிதமாக எழுதி இயக்கி தயாரித்திருந்தார் வெற்றி துரைசாமி. இப்படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். விழாவில் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
நமது தமிழ் படங்கள் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவதென்பது இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் படைப்பூக்கத்தை கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை.
விழாவில் வழங்கிய விருதை ஏற்றுக்கொண்டு இயக்குநர் வெற்றி துரைசாமி பேசும்போது, “இந்தப் படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது.
இப்படி உலகத் திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்ல படங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்த விருது பெரும் முனைப்பாக இருக்கும்…” என்றார்.
மேலும் இதே ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் கேமராமேன் சண்முகசுந்தரத்திற்கு ஸ்பெசல் ஜுரி அவார்ட் கிடைத்தது.
இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்ளும் போது, “இந்தப் படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமராவொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.