full screen background image

இளமை துள்ளலுடன் படமாகியிருக்கும் ‘என் சுவாசமே’ திரைப்படம்

இளமை துள்ளலுடன் படமாகியிருக்கும் ‘என் சுவாசமே’ திரைப்படம்

SVKA Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சஞ்சய் குமார், S.அர்ஜூன் குமார், S.ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R.மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக் குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசும்போது, “நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3-வது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாக திரைத் துறையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும்.  எனக்கு இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என்றார்.   

பாடலாசிரியர் ்ரீவித்யா பேசும்போது, “தமிழ்த் திரையுலகில் இப்படம் மூலம் நான்  அறிமுகமாகிறேன். நான் கல்லூரிப் பேராசிரியர். பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் என் நண்பர் அவர் மூலமாகத்தான்  இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்திக்கான  வரிகளை நான் எழுதியுள்ளேன். தமிழில் எழுதவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. பெண்களை அவர்களின் உடலை வெளிகாட்டுவதை,  நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய உலகம் அதைத்தான் விரும்புகிறது.  இப்படத்திற்காக படக் குழுவினர்கள் நன்றாக உழைத்து, விஷுவல்களை உருவாக்கியுள்ளனர். இளமை துள்ளல் படம் முழுக்க தெரிகிறது. படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..” என்றார்.   

இசையமைப்பாளர் பிஜே பேசும்போது, “எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும். அதனால் மன்னிக்கவும். தமிழ்ப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன்  அங்கு ரஜினி, கமல் படங்கள்தான் அதிகம் ஓடும்.   இந்தப் படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது. எனக்கு ராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களால்தான்  இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன். தமிழக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்..” என்றார்.

நடிகை குள்ளப்பள்ளி லீலா பேசும்போது, “எனக்கும் மலையாளம் மட்டுமே தெரியும். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.  இந்தப் படத்தின் வாய்ப்பிறக்காக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இயக்குநரை எனக்கு நன்கு தெரியும். கடுமையான உழைப்பாளி, அவருக்கு எல்லோரும் நல்ல வாய்ப்புகள் தர வேண்டும். அவர் பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும். இபடத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார். 

நடிகை அம்பிகா மோகன் பேசும்போது, “இந்த ‘என் சுவாசமே’ படத்தில் நடித்ததில் மிகப் பெரும் மகிழ்ச்சி. தமிழில் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளேன். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. ஒரு குடும்பமாக இருந்து, அனைவரும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..” என்றார். 

நடிகர் சாப்ளின் பாலு பேசும்போது, “ஒரு சின்ன கேரக்டர் என்று நினைத்துதான் இந்தப் படத்தில் நடிக்கப் போனேன். ஆனால், எனக்குப் பெரிய கேரக்டகை தந்து, படம் முழுக்க வர வைத்துவிட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார். அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார். 

நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது, “இந்த ‘என் சுவாசமே’ படத்தின் டிரெய்லரையும், பாடல் காட்சிகளையும் முன்பே பார்த்துவிட்டேன். மொபைலில் பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னப் படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை. அன்பு இல்லை. உணர்வில்லை. சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம்.  என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப் பெறும்.

மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையைவிட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது. இப்படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார். 

இயக்குநர் பேரரசு பேசும்போது, “லீலா அம்மா அவர்களுக்கு என் முதல் வணக்கம். நீங்கள் இங்கு வந்தது நிறைவு. ‘என் சுவாசமே’ டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம்தான். இங்கு யாரும் மொழியைப் பெரிதாக பார்ப்பதில்லை. எல்லோரையும் கொண்டாடுவார்கள்.

மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து, இந்தியிலிருந்து எல்லாம்  படங்கள் இங்கு ரீமேக் ஆகும். இங்கு நாங்கள் அனைவரையும் கொண்டாடுவோம். என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார். 

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஆர்.மணி பிரசாத் பேசும்போது, “இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள். மலையாளப் படங்களை இங்கு கொண்டாடுவதுபோல தமிழ்ப் படங்களை கேரளத்தில் கொண்டாடுவார்கள். கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு குறைவான நேரமே இருந்தது. அதனால்தான் மலையாளக் கலைஞர்கள் நிறைய பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி..” என்றார். 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள். ஆனால் தமிழில் ஆங்கில டைட்டிலைத்தான் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப் பற்று. இந்தப் படத்தின் 3 பாடல்களை இங்கே போட்டுக் காட்டினார்கள். அத்தனை அற்புதமாக இருந்தது. இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம்.

மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத்தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள், இங்கு ஏவி.எம்.மில் ஷீட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்துக் கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர  வேண்டும்.  இந்த ‘என் சுவாசமே’ படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். 

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இணை தயாரிப்பாளர் ரமேஷ் வெள்ளைதுரை வரவேற்று பொன்னாடை போற்றி வரவேற்றார்.

Our Score