‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ‘லெவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான இசையை டி.இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத் தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார். பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
இயக்குநர் சுந்தர் சி-யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்தப் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
‘லெவன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசும்போது, “ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக இந்த ‘லெவன்’ திரைப்படம் அமையும்.
திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்றார்.
‘லெவன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.









