“தலைவி’ படத்தில் நடித்தபோது மற்றைய இயக்குநர்களைவிடவும் இயக்குநர் விஜய் தனக்கு அதிக மரியாதை கொடுத்ததாகச் சொல்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.
நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ‘தலைவி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா, இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பேசும்போது, “இந்தத் ‘தலைவி’ திரைப்படத்திற்காக என்னை அணுகியபோது முதலில் இந்தப் படத்தில் நடிக்கத் தயங்கினேன். பிறகு இயக்குநர் விஜய்தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்தார்.
மேலும், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்குக் கொடுக்கப்பட்டதே இல்லை. இந்தப் படத்தில் இயக்குநர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்.
என் திறமைக்கு மதிப்பளித்தார். என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்..” என்றார்.