சங்கம் வளர்த்த மாமதுரையில் கல்வித் துறையில் புகழ் பெற்று விளங்கும் 125 வருடப் பாரம்பரியம்மிக்க தன்னாட்சி பெற்ற கல்லூரியான ‘மெஜூரா காலேஜ்’ என்னும் ‘மதுரை கல்லூரி’, தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குநர்’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியிருக்கிறது.
நேற்று மார்ச் 26 மாலை 5 மணி அளவில் மதுரை கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர் முனைவர் ந.ரத்தினக்குமார் ஒருங்கிணைப்பாளர் அவர்களாலும் 2000 மாணவ, மாணவிகள் முன்னிலையில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு பட்டயச் சான்றிதழும், விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.
“சாதாரணமானவர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர் இயக்குநர் சீனு ராமசாமி.
‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு மதிப்பு கூட்டிய திரு. சீனு ராமசாமி அவர்களுக்கு ‘மக்கள் இயக்குநர்’ என்னும் விருதை வழங்குவதில் மதுரை கல்லூரி பண்பாட்டுக் கழகம் பெருமை கொள்கிறது..” என்ற விருது பட்டயம் வாசித்து மேடையில் இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதினை மகிழ்வோடு பெற்றுக் கொண்ட இயக்குநர் சீனு ராமசாமி தனது ஏற்புரையில், “வாழும் காலத்தில் பட்டப் பெயர்களை, அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்டவிதத்தில் மக்கள் தரும் பட்டப் பெயர்களே நிரந்தரமானவை. ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க இந்த மதுரை கல்லூரியின் கல்விக் குழுமம் வழங்கும் இவ்விருதினை பெருமையுடன், மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்ப்பத்தில் எனக்குள் மேலும் பொறுப்புணர்ச்சியும் கூடியிருக்கிறது. மேலும் பல நல்ல படைப்புகளை இந்த தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நான் படைக்க வேண்டும் என்கிற பெரும் அவா என்னுள் தோன்றியுள்ளது. இந்த விதைக்கு மேலும் உரமூட்டிய இந்த மதுரை கல்லூரிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்…” என்றார்.
‘மக்கள் இயக்குநர்’ விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமிக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!