full screen background image

“பணம் வாங்கிக் கொண்டு மோசமான படத்தை ‘நல்ல படம்’ என்கிறார்கள்” – யூடியூப் விமர்சகர்கள் பற்றி இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் புகார்

“பணம் வாங்கிக் கொண்டு மோசமான படத்தை ‘நல்ல படம்’ என்கிறார்கள்” – யூடியூப் விமர்சகர்கள் பற்றி இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் புகார்

மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர். இவர் இயக்கிய ‘சாட்டர்டே நைட்’ என்ற படம் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் படத்தின் இடைவேளையிலேயே சிலரிடம் பேட்டியெடுத்து “படம் சுமார். போரடிக்குது…” என்பதுபோல செய்திகளை வெளியிட்டனர்.

இதனால் கோபமடைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் அந்த விமர்சகர்களைக் கடுமையாகத் திட்டி பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் பேசும்போது, “நான் கடந்த 17 வருட காலமாக இந்த சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் கவலைப்படுகிறேன்.

படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகிறார்கள். 2 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, மோசமான படத்தை நல்லா இருக்குது  என்று ட்வீட் செய்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்.

யூ டியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகிறார்கள். அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள்.  அது தவறு. நல்ல விமர்சனம் செய்யும் யூ டியூபர்கள் இங்கே குறைவு. தனிப்பட்ட விஷயங்களையும் விமர்சனத்தில் இழுக்கிறார்கள்…” என்று கண்டித்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

Our Score