பிரபல இயக்குநரும், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஆர்.கே.செல்வமணியும் அரிதாரம் பூசிவிட்டார்.
மக்கள் பாசறை தயாரிப்பில் உருவாகி வரும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார் ஆர்.கே.செல்வமணி.
இந்தப் படத்தில் நடிகர் ஆர்.கே. நாயகனாக நடிக்கிறார். நீது சந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஷ் இணையும் மூன்றாவது படம் இது.
நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிபவரான நடிகர் ஆர்.கே., இதில் சண்டைக் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளார்.
நம்மூர் சண்டைப் பயிற்சி போதாது என்று அமெரிக்கா போய் சண்டைப் பயிற்சியின் நுணுக்கங்களை கற்று வந்துள்ளார். நியூயார்க் அருகில் க்ரீன் பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்று 15 நாட்கள் பயிற்சி எடுத்தார். பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சியும் பெற்றார் ஆர்.கே. சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்து பயன்படுத்தியுள்ளார்.
படத்தின் பிரதான வில்லனாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடித்திருக்கிறார். குழந்தைகள் பூங்கா ஒன்றில் அவர் செய்யும் நாசகரமான அழிவைத் தடுக்கும் காட்சியில் சதியை தடுத்து நிறுத்த மோதிப் போராடும் காட்சியில் சண்டைக் காட்சியில் ஆர்.கே சாகசம் காட்டியுள்ளார். ஆர்.கே.வும், ஆர்.கே. செல்வமணியும் மோதும் காட்சிகள் மிரட்டலாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சண்டைக் காட்சிக்காக விதவிதமான மனித உருவிலான மண்பொம்மைகள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் அந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டன. அவற்றை ஈ.வி.பி. பார்க் முழுவதும் பரவலாக ஆங்காங்கே வைத்தனர். அத்தனை பொம்மைகளும் பின்னர் காட்சிக்காக வெடி வைத்து வெடிக்கப்பட்டது.
இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை சண்டை இயக்குநர் கனல் கண்ணன் காட்சிகள் அமைக்க 13 நாட்கள் எடுக்கப்பட்டது. இதில் ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் தவிர ஆறு கேமிராக்கள் படப்பிடிப்பு நடந்த 13 நாட்களும் பயன்படுத்தப்பட்டன.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இக்காட்சியை ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஹாலிவுட்டிற்கு நிகரான சண்டைக் காட்சியாக கண்டுகளிக்கலாம்.